’பாஜகவின் நரித்தனங்கள் எதுவும் பலிக்காது’ முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

’பாஜகவின் நரித்தனங்கள் எதுவும் பலிக்காது’ முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

ழல் குற்றச்சாட்டில் சமீபத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தாமாகப் பதவி நீக்கம் செய்தார். மீண்டும் சில மணி நேரங்களில் அவரே அதைத் திரும்பப் பெற்றார். மேலும், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரிதாக முனைப்புக் காட்டி வருகிறார். இவை குறித்து இன்று ஒரு பிரபல ஆங்கில நாளிதழுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்து இருக்கிறார். அந்தப் பேட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கூறிய இரு விஷயங்கள் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை முன்வைத்துப் பேசி இருக்கிறார்.

அதில் அவர், “எனது தலைமையிலான தி.மு.க. அரசு, மக்களுக்கு எந்த நன்மையையும் செய்து விடாமல் தடுப்பதே ஆளுநரின் உள்நோக்கமாக உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்திருப்பதை ஆளுநரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆளுநருக்கு துளியும் கிடையாது. அதனால்தான் அவர் தமிழ்நாடு அரசுக்கு எதிராக விதண்டாவாதம் பேசி வருகிறார். உதாரணமாக, புதிய ஒப்பந்தங்கள் போடுவது, உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுப்பதற்காக நான் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு சென்றபோது, 'நேரில் அழைப்பு விடுப்பதால் முதலீடுகள் வராது' என்று இவர் பேசுகிறார். இப்படி இவர் பேசுவதன் மூலம் முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்களிடையே தமிழ்நாடு குறித்த தவறான பிம்பத்தை ஒரு உருவாக்குவதோடு, தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகள் கிடைத்துவிடக் கூடாது, தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகி விடக் கூடாது என நினைக்கிறார். சமீபத்திய ஆளுநரின் ஆதாரமற்ற, அரசியல் சட்டத்தை மீறிய பேச்சுகள் மற்றும் நடவடிக்கைகள் சமூக சலசலப்பு மற்றும் நல்லிணக்கத்தை சிதைப்பதாக உள்ளன. தனக்கு எந்த அதிகாரமும் கிடையாது, அரசியல்சட்டப்படி, தான் ஒரு நியமன ஆளுநர் என்பது அவருக்குத் தெரியும். தெரிந்தே, அவர் தமிழக மக்களின் நலனுடன் விளையாடிக் கொண்டு இருக்கிறார்!

ஆளுநர் தாம் கூறும் கருத்துக்களை எல்லாம் மத்திய அமைச்சகம் சொல்லித்தான் செய்கிறாரா என்பதற்குள் நான் போக விரும்பவில்லை. அவராகச் செய்தாலும், மத்திய அரசு சொல்லிச் செய்தாலும், ஒரு ஆளுநருக்கு அமைச்சர்களை நியமிக்கவோ, நீக்கவோ அதிகாரம் இல்லை என்பதே அரசியல் சட்டம்! ஆளுநரை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை என்றால், மக்களின் கோபத்துக்கு அவர் நிச்சயம் ஆளாக நேரிடும். அதனால் ஆளுநர் ரவியை இங்கிருந்து மாற்றுவது மட்டுமல்ல, ஆளுநர் பதவியே கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு ஆகும்” என்று கூறினார்.

‘கடந்த காலங்களில் வழக்குகளில் சிக்கிய அதிமுக அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நீங்களே ஆளுநரிடம் கோரிக்கை வைத்து இருக்கிறீர்கள். தற்போது ஏன் இந்த முரண்பாடு’ என்று கேட்டபோது…

“அரசியலில் இதுபோன்ற கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் வைப்பது  வாடிக்கைதான். ஆனால், ஆளுநர் அரசியல்வாதியாக மாறக் கூடாது. அப்படி அவர் நடக்காததுதான் எங்களது சந்தேகத்துக்குக் காரணம். செந்தில் பாலாஜியை பாஜக குறிவைப்பதைப் போன்றே ஆளுநர் செயல்படுகிறார். இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். செந்தில் பாலாஜி கைது சட்ட விரோதம் என்று அவரது மனைவி வழக்கு தொடுத்திருக்கிறார். ஆட்சியில் இருந்தபோதும், ஆட்சியில் இல்லாதபோதும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அதிமுக அமைச்சர்களை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை கைது செய்யவில்லை. ஆனால், அரசியல் பழிவாங்கும் எண்ணத்தோடு செந்தில்பாலாஜியை வருமானவரித் துறை ரெய்டு செய்கிறது, அமலாக்கத்துறை கைது செய்கிறது. அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக அரசு இந்த அமைப்புகளைப் பயன்படுத்துகிறது என்பது எங்களின் பகிரங்கக் குற்றச்சாட்டு. இதயத்தில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்ன பிறகும் அது ‘நாடகம்’ என வாதிடுகிறது அமலாக்கத்துறை. இந்த மனித நேயமற்ற செயலைத்தான் அதிகார துஷ்பிரயோகம் என்கிறோம். எனவே, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க முடியாது என்பதே எங்களது நிலைப்பாடு. மருத்துவமனையில் இருப்பதால் துறை இல்லாத அமைச்சராக அவர் தொடர்கிறார். நேர்மையான, சட்டத்திற்குட்பட்ட விசாரணைக்கு நாங்கள் எந்தக் காலத்திலும் எதிர்ப்பு தெரிவித்தது இல்லை.

குற்ற வழக்குகள் பல இருக்கும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மாநிலங்களிலும் மத்திய அரசிலும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். வழக்கில் தண்டிக்கப்படும் வரை முதலமைச்சராக பதவியில் நீடித்தவர்தான் அம்மையார் ஜெயலலிதா. பாஜகவின் மத்திய அமைச்சரவையில் எத்தனை பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன என்பது தேர்தல் அபிடவிட்டை பார்த்தாலே தெரியும். ஆகவே ‘தார்மீக அடிப்படை’ என்பது ஒருவழிப் பாதையாக இருக்க முடியாது. பாஜக தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கப் பயன்படுத்தும் கிளை அமைப்பாக அமலாக்கத்துறை மாற்றப்பட்ட பிறகு, நான் எடுத்துள்ள நிலைப்பாடே சரியானது. வருமான வரித்துறை அதிகாரிகளை செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் தாக்கியது தவறான செயல்தான். அதனை நான் கண்டித்தேன். அதைத் தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு தரப்பட்டது. அதிகாரிகளைத் தாக்கியவர்களை கைது செய்துள்ளது இந்த அரசு. அதை பாஜகவின் துணை அமைப்பாகப் பயன்படுத்தப்படும் வருமான வரித்துறையும் மறைக்கிறது. பத்திரிக்கையாளர்களாகிய நீங்களும் மறைக்கிறீர்கள்” என்றார்.

‘மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டோடு பேசி வருகிறீர்கள். எதிர்க்கட்சிகளை ஒன்றாக அணி திரட்டுகிறீர்கள். இதற்காகத்தான் உங்கள் அரசு மீது மத்திய அரசு குறி வைக்கிறதா?’ என்று கேட்டபோது…

“ஆமாம்! அதுதான் உண்மை. அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் என்னை சந்தித்து வருகிறார்கள். அவர்களிடம் பாஜகவுக்கு எதிராக ஒரே அணி அமைய வேண்டும் என நான் வலியுறுத்தி வருகிறேன். பாஜக - காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை அமைக்க வேண்டும் என்று என்னிடம் சிலர் சொன்னபோது, அதை நான் முற்றிலும் நிராகரித்து விட்டேன். காங்கிரசையும் உள்ளடக்கிய ஒரு அணியால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்றும் சொன்னேன். இவை எல்லாம் ரகசியத் தகவல்கள் அல்ல, பொதுமேடைகளிலேயே இதை சொல்லி விட்டேன். பாட்னாவில் நடந்த கூட்டத்திலும் தேர்தல் அணிகளை எப்படி அமைப்பது என்பதை நான் விளக்கி இருக்கிறேன். பாஜகவுக்கு ‘பாட்னா பயம்’ எப்படி வந்திருக்கிறது என்பதை மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் மோடி தி.மு.க.வையும் கலைஞரையும் பழித்துப் பேசியதைப் படித்தால் உணரலாம். திமுக அமைச்சர்களைக் குறி வைப்பதால், நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப்போவதில்லை. இதற்குப் பிறகுதான் எங்கள் நிலைப்பாடுகளில் வேகம் அதிகமாகி இருப்பதாக நான் நினைக்கிறேன்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் கெடுக்க பாஜக எந்தவிதமான சூழ்ச்சிகளிலும் ஈடுபடும். அதன் ஒருபகுதியைத்தான் மகாராஷ்டிராவில் பார்க்கிறோம். பாஜகவின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை மக்கள் மவுனமாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களின் மவுனத்தை தங்கள் மீதான பயம் என நினைத்த பாசிசவாதிகள் வீழ்ந்ததுதான் வரலாறு. எனவே, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் குலைக்க பாஜக செய்யும் நரித்தனங்கள் எதுவும் பலிக்காது. மதச்சார்பற்ற முற்போக்குச் சக்திகள் கூட்டணி அமைப்பதையும், வெற்றி பெறுவதையும், இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்படப் போவதையும் இனி பாஜகவால் தடுக்க முடியாது” என்று கூறி உள்ளார்.

‘பாஜக சார்பில் அகில இந்திய அளவில் மோடி பிரதம வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் அப்படி ஒருவர் முன்னிறுத்தப்படவில்லையே. இந்த நிலையில் தேர்தலில் அந்தக் கட்சியை வீழ்த்த முடியுமா?’ என்று கேட்டபோது,

“அகில இந்திய அளவில் பாஜகவே இன்னும் நரேந்திர மோடியை முன்னிறுத்தவில்லை. அவரைத்தான் முன்னிறுத்துவார்கள் என்று நீங்களாக கற்பனை செய்து கொண்டு கேட்கிறீர்கள். தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. பொதுவாக, கூட்டணிக்கு தலைவர் இருப்பதை விட, இலக்கு இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி, கூட்டாட்சிக் கொள்கை, அரசியல் சட்டம் என அனைத்துக்கும் எதிராகச் செயல்படும் பாஜகவை வீழ்த்துவோம் என்ற கருத்தியலே எங்கள் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது” என்று கூறி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com