அரசு நிலத்தில் குடியிருக்கும் பல்லாயிரம் பேருக்கு நிலப்பட்டா வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

அரசு நிலத்தில் குடியிருக்கும் பல்லாயிரம் பேருக்கு நிலப்பட்டா வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்!
Published on

ரசுக்கு சொந்தமான நிலங்களில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி குடியிருப்போருக்கு அந்த நிலங்கள் அரசின் உபயோகத்துக்கு தேவையில்லை எனில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர் ஆகியோரைக் கொண்ட குழு அந்த நிலங்களை தணிக்கை செய்து உள்ளாட்சி மன்றங்களில் தீர்மானங்களை பெற்று தகுதியின் அடிப்படையில் குடியிருப்புகளை வரன்முறைப்படுத்த தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டது. மேலும், சென்னை புறநகர்ப் பகுதி, நகராட்சி மற்றும் மாநகராட்சி எல்லைக்குள் வீட்டுமனை ஒப்படை செய்ய விதிக்கப்பட்ட தடையாணையும் ஒருமுறை மட்டுமே வரன்முறை செய்து வீட்டுமனை ஒப்படை வழங்கும் திட்டத்துக்கு முன்னர் தளர்வு செய்யப்பட்டது.

அந்த வகையில், 2000 - 2011 காலகட்டங்களில் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்கள் கிராமக் கணக்குகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நத்தம் அடங்கலில் ஏற்றப்படாததால், தங்களால் அதிகாரப்பூர்வமான பரிவர்த்தனை / வங்கிக் கடன் பெற இயலவில்லை என்று திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பொதுமக்களிடமிருந்தும் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும் தொடர்ந்து கோரிக்கைகள் வரப்பெற்றன.

இக்கோரிக்கைகள் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு, மேற்கண்ட வீட்டுமனைப் பட்டாக்களின் கிராமக் கணக்குகளில் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு, பட்டா வழங்கப்பட்ட விவரங்களை கிராம நத்தம் அடங்கல் மற்றும் வட்ட அலுவலகங்களில் பராமரிக்கப்படும் கணினி மயமாக்கப்பட்ட நத்தம் தரவுகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் அறிவுறுத்தினார்.

அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.10.2023) செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில், ‘கள ஆய்வில் முதலமைச்சர்‘ திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் 8136 பட்டாக்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3949 பட்டாக்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் 4411 பட்டாக்கள் என மொத்தம் 16,496 பட்டாக்கள் கிராம கணக்குகளில் மாறுதல் செய்யப்பட்டதன் அடிப்படையில் முதற்கட்டமாக வழங்கினார். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 3256 பட்டாக்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 பட்டாக்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 197 பட்டாக்களும் என மொத்தம் 3462 பட்டாக்கள் கிராமக் கணக்குகளில் மாறுதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளும் விரைவில் நிறைவு பெறும்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., அரசு துறைச் செயலாளர்கள், துறை தலைவர்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் இ.ஆ.ப., திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.த.பிரபுசங்கர் இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com