
தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சமூக நல திட்டங்களால், எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் வறுமையை குறைக்கும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்டு வரும், பல சமூக நல திட்டங்களால், தமிழகம் மிகச்சிறந்த முன்னேற்றம் அடைந்து உள்ளது. எனினும், தற்போது மிகவும் வறிய நிலையில் வாழும் ஏழை குடும்பங்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, கொண்டு வரப்பட்டது தான் 'முதல்வரின் தாயுமானவர் திட்டம்'. இந்த திட்டத்தின் நோக்கம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கே சென்று சேரன் பொருள்களை வழங்குவதாகும்.
அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடுதேடிச் சென்றடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய எண்ணத்தின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தினை இன்று காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைத்தாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை வினியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்(chief minister thayumanavar scheme) இன்று முதல் செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலம் சார்ந்த இந்த திட்டம் சிறப்பு கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவு பாதுகாப்பையும் உறுதி செய்யும். இந்த திட்டத்தின் வாயிலாக 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கொண்ட 15, 81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42, 657 பயனாளர்களும், 91,9,069 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்திறனாளிகளும் என ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள சுமார் 21,70,455 பயனாளர்களுக்கும் அவர்களின் இல்லங்களிலேயே ரேஷன் பொருட்களை வினியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி ஞாயிற்று கிழமைகளில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்களின் விவரம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையிடம் இருந்து பெறப்பட்டு பல அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று உரிமைப்பொருட்களை வழங்குவதால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.