கம்பளி பூச்சி பூஞ்சையைத் திருட ஊடுருவும் சீனா!

கம்பளி பூச்சி பூஞ்சை
கம்பளி பூச்சி பூஞ்சை

இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா அடிக்கடி ஊடுருவி பிரச்சினை ஏற்படுகிறது. இப்பகுதியில் காணப்படும் அரியவகை கம்பளிப் பூச்சி பூஞ்சைகளை திருடவே சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லையில் ஊடுருவுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் இமயமலையை ஒட்டி அமைந்துள்ள அருணாச்சல பிரதேசத்தை சீனா தனது நிலப்பகுதி என சொந்தம் கொண்டாடுகிறது. இப்பகுதியில் சீன ராணுவத்தினர் அடிக்கடி ஊடுருவி வருகின்றனர். சமீபத்தில், அருணாச்சலின் தவாங் செக்டாரில் இந்திய மற்றும் சீன துருப்புகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்படி அருணாச்சல பிரதேசத்தில் சீனா வீரர்கள் அடிக்கடி ஊடுருவ காரணம், அங்கு இமயமலைத் தொடரில் விளையும் மருத்துவ குணம் கொண்ட அரிய வகை பூஞ்சையை திருடுவதற்குதான் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இந்தோ பசிபிக் தகவல் தொடர்பு மையம் அளித்த தகவலின்படி, மருத்துவ குணம் கொண்ட கார்டிசெப்ஸ் அல்லது கம்பளி பூச்சி பூஞ்சை  இமயமலைகளில் அதிகம் காணப்படுகிறது. ‘இமயமலை தங்கம்' என அழைக்கப்படும் இந்த பூஞ்சை புற்றுநோய் உள்ளிட்ட பல கொடிய நோய்களையும் தீர்ப்பதாகக் கருதப் படுகிறது. தங்கத்தை விட பல மடங்கு விலை அதிகமான பூஞ்சையை தேடித்தான் சீன வீரர்கள் அருணாச்சல் எல்லையில் அடிக்கடி வருவதாக இந்திய ராணூவம் கண்டறிந்துள்ளது.

இந்த பூஞ்சை பொதுவாக இமயமலைப் பகுதிகளிலும், தென்மேற்கு சீனாவில் கிங்காய் - திபெத்திய பீடபூமியின் அதிக உயரமான பகுதிகளில் காணப்படுகிறது. உலகிலேயே கம்பளிபூச்சி பூஞ்சையின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சீனாதான். ஆனால் சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இந்த பூஞ்சை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியப் பகுதி இமயமலைகளில் உள்ள கம்பளிப் பூச்சி பூஞ்சைகள் மீது சீன ராணுவம் குறிவைத்து செயல்படுவதாக கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com