

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக உயர்வு, 1,500க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம் ஏற்கனவே இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட வரலாறு காணாத பனிப்பாறை சரிவு மற்றும் பெருவெள்ளத்தால் நிலைகுலைந்து போயிருக்கும் நேபாளத்திற்கு, அடுத்த 72 மணி நேரத்திற்குள் மற்றுமொரு மிகப்பெரிய விபரீதம் காத்திருப்பதாகச் சீன விண்வெளி மற்றும் நீர்வள அமைச்சகம் அதிரடி எச்சரிக்கை (சீன எச்சரிக்கை) விடுத்துள்ளது. எல்லையில் புதிதாகத் தோன்றியுள்ள ஒரு ராட்சத தற்காலிக ஏரி எந்த நேரத்திலும் உடையலாம் என்பதால் எல்லையோரக் கிராமங்கள் ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 26-ம்தேதி, நேபாள-சீன எல்லைப் பகுதியில் திடீரென பூமி அதிரும் வண்ணம் அசுர வெள்ளம் பாய்ந்து வந்தது. ஆரம்பத்தில் இது நிலநடுக்கத்தால் ஏற்பட்ட வெள்ளம் என்று கருதப்பட்ட போதிலும், தற்போது செயற்கைக்கோள் ஆய்வுகள் மூலம் அது ஒரு பனிப்பாறை சரிவு (Glacial Collapse) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இமயமலையின் திபெத் பகுதியில் கோடிக்கணக்கான கன மீட்டர் பனிப்பாறைகளும் பாறைகளும் ஒட்டுமொத்தமாகச் சரிந்து லெண்டே ஆற்றில் விழுந்ததால், சுமார் 33 அடி உயரத்திற்கு அசுர வெள்ளம் உருவானது.
இந்த திடீர் வெள்ளத்தால் நேபாளம் மற்றும் அதன் அண்டை நாடான திபெத்தில், நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 1,500-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களால் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுக்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. மீட்புப்பணியில் நேபாள ராணுவம் ஈடுபட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மீட்புப் பணிகளில் சவால்கள் நீடித்து வருகின்றன.
மாயமானவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே பெருவெள்ளத்தால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு அடுத்த பேராபத்து காத்திருப்பதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. நேபாளம் அருகே உருவாகியுள்ள புதிய தடுப்பு ஏரி, அடுத்த ஓரிரு நாட்களில் உடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சீனா தெரிவித்துள்ளது. நேபாளத்தின் சோசென் கோலா மற்றும் புரேபு சாங்கோ நதிகள் சங்கமிக்கும் பகுதியில் ஆபத்தான வகையில் இந்த இயற்கையான தடுப்பு ஏரி (Barrier Lake) உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
நிலச்சரிவால் உருவாகியுள்ள இயற்கையான தடுப்பு ஏரி (Barrier Lake) நிரம்பி வழியும் நிலையில், அடுத்த 72 மணி நேரத்திற்குள் நேபாளத்தில் மீண்டும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக சீனா எச்சரித்துள்ளது.
இயற்கையாக உருவாகியுள்ள இந்த பெரிய தடுப்பு ஏரியில், நேற்றைய நிலவரப்படி நீர் கொள்ளளவு 20 லட்சம் கன மீட்டராக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த 3 நாள்களுக்குள் ஏரியின் கொள்ளளவு 30 லட்சம் கன மீட்டராக அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
ஏரியின் கொள்ளளவு அதிகரிப்பால், இந்த இயற்கையான தடுப்பு உடைந்து இரண்டாம் கட்ட வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக சீன நாட்டின் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகின.
ஏரி உடைந்தால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஏற்பட்ட பெருவெள்ளத்தால் 359-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்த ஏரி உடைந்தால் போதே கோஷி மற்றும் பூடே கோஷி நதிகளில் இரண்டாவது கட்ட திடீர் வெள்ளம் பாயும் அபாயம் உள்ளது.
நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வரும் சீன அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர், மேலும் நேபாள நாட்டு மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.