அமெரிக்காவில், மிகவும் அபாயகரமான உயிரியல் நோய்க்கிருமிகளை சட்டவிரோதமாகக் கடத்தியதாக இரண்டு சீன ஆராய்ச்சியாளர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க நீதித்துறை மற்றும் எஃப்.பி.ஐ. இணைந்து மேற்கொண்ட விசாரணையின் முடிவில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் யுன்கிங் ஜியான் (33) மற்றும் சுன்யோங் லியு (34) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சீனா குடியரசின் குடிமக்கள். அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக, "ஃபியூசேரியம் கிராமினேரம்" (Fusarium graminearum) எனப்படும் ஒரு நச்சு பூஞ்சையை கடத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த பூஞ்சை, "அக்ரோடெரரிசம் ஆயுதம்" என்று அறிவியல் இலக்கியங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசி போன்ற பயிர்களில் "ஹெட் பிளைட்" (head blight) எனப்படும் கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடியது. இதன் மூலம் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன. மேலும், இந்த பூஞ்சையின் நச்சுகள் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் வாந்தி, கல்லீரல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்க குறைபாடுகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
லியு, ஜூலை 2024 இல் அமெரிக்காவிற்கு வந்தபோது, டெட்ராய்ட் மெட்ரோபொலிட்டன் விமான நிலையம் வழியாக இந்த ஆபத்தான பூஞ்சையை கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அவர் மறுத்தாலும், பின்னர் இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஜியான், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த நிலையில், லியு சீனப் பல்கலைக்கழகம் ஒன்றில் அதே நோய்க்கிருமி குறித்து ஆய்வு செய்து வந்துள்ளார்.
இந்த கடத்தல், பயங்கரவாத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம் என்ற கோணத்தில் அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஜியான், சீன அரசாங்கத்திடம் இருந்து இதேபோன்ற நோய்க்கிருமி ஆய்வுக்காக நிதி பெற்றதாகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் அவருக்கு விசுவாசம் இருந்ததற்கான ஆதாரங்கள் அவரது மின்னணு சாதனங்களில் இருந்து கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பயங்கரவாத முகவர்களால் அமெரிக்காவின் விவசாயத்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து இந்த வழக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இந்த வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.