

‘லவ் ஜிஹாத்’ சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, குஜராத்தில் பதிவு திருமணம் செய்ய இனி பெற்றோர் சம்மதம் கட்டாயம் என சட்டத்திருத்தம் செய்ய உள்ளதாக ஆளும் பாஜக அரசு அறிவித்துள்ளது.
குஜராத் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பேசிய துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்கவி, ‘லவ் ஜிஹாத்’ சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, திருமண பதிவு முறையை கடுமையாக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்தார். இந்த வரைவு சட்டத்தின் கீழ், பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்ய விரும்புவோர், இனி பெற்றோரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ய முடியாது என்ற விதி மாற்றப்பட உள்ளது.
குஜராத்தில் காதல் திருமணம் என்ற பெயரில் அப்பாவி பெண்களை ஏமாற்றி சூழ்ச்சி வலையில் சிக்க வைப்பது கரையான்கள் போன்று பரவி வருவதாக கூறிய ஹர்ஷ் சங்கவி இதனை தடுக்கும் பொருட்டு திருமண பதிவு முறையில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்தார்.
‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில், பெண்களை ஏமாற்றப்படுவது, மத மாற்றம் என்ற பெயரில் கலாசார ஊடுருவல் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் அரசு காதல் திருமணங்களுக்கு எதிரானது அல்ல என்றும் அவர் கூறினார்.
மதமாற்றத்தை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறும் குஜராத் பாஜக அரசு, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம் என்றும் அதன் பிறகு ஒரு குழுவின் ஆய்வுக்குப் பின்னரே புதிய திருத்தங்கள் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
இதன்படி, திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமக்கள், தாங்கள் அந்த தகவலை பெற்றோருக்கு தெரிவித்துவிட்டோம் என்பதற்கான உறுதிமொழிப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் மணமக்களின் பெற்றோர் பெயர், முகவரி, ஆதார் எண் போன்ற விபரங்கள் குறிப்பிடுவது கட்டாயம்.
விண்ணப்பதை சமர்ப்பித்த 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட உதவிப் பதிவாளர் மணமக்களின் பெற்றோருக்குத் தொலைபேசி வாயிலாகவோ, வாட்ஸ் ஆப் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தகவல் தெரிவிப்பார்.
விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, அனைத்து விதிகளும் பூர்த்தியாகி இருப்பதை உறுதி செய்த 30 நாட்களுக்கு பிறகே, திருமணம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படும்.
அதேபோல் தம்பதிகளின் வசிப்பிட எல்லைக்குட்பட்ட பதிவு அலுவலகங்களில் மட்டுமே திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில், திருமணச் சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த விபரங்க அனைத்தும் மாநில அரசு உருவாக்கும் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பெற்றோரின் அனுமதியின்றி நடக்கும் திருமணங்களை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று படேல், தாக்கூர் மற்றும் சத்திரிய சமூகத்தினர் நீண்டகாலமாகக் கோரி வந்த நிலையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹர்ஷ் சங்கவி அறிவித்த இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்த நிலையில், காங்கிரஸ் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.
இதனிடையே காதல் திருமணங்களை தடுக்கவே இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதாக பலர் விமர்சனம் செய்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
வழக்கறிஞர் மகேஷ் பாரியா கூறுகையில், ‘இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21-ன் கீழ் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான தனிமனித சுதந்திரத்தை இது மீறுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.