

காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் உள்ள 14,000 அடி(4,000 மீட்டருக்கு மேல்) உயர அஃபர்வத் சிகரத்தில் மேகங்களுக்கு நடுவே சுழலும் ஒரு புதிய உணவகம்(revolving restaurant) திறக்கப்பட்டுள்ளது. இந்த அஃபர்வத் சிகரம் என்பது குல்மார்க் கோண்டோலா கேபிள் கார் பாதையில் அமைந்துள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை கவரும் புதிய இடமாக அமைந்துள்ளது. இது பனிச்சறுக்கு வீரர்களுக்கான வசதிகளையும் கொண்டுள்ளது. இந்த உணவகம் இமயமலையின் அழகையும், பாரம்பரிய உணவையும் மேகங்களுக்கு நடுவே அமர்ந்து ரசிக்க ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகின்றது.
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறுவகையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே குல்மார்க்கில் கோண்டோலா(Gondola) என்ற கேபிள் கார் ரைடு, பனிச்சறுக்கு, Igloo கஃபே போன்றவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் குல்மார்க்கில் திறக்கப்பட்டுள்ள இந்த சூழலும் உணவகமும் மற்றொரு சிறந்த அடையாளமாக மாறியுள்ளது. இதனை ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அவர்கள் திறந்து வைத்தார்.
பனி படர்ந்த மலைகளும், காஷ்மீரின் பாரம்பரிய உணவு வகைகளும், மேகக் கூட்டங்களும் என பரந்த இமயமலையின் அமைப்பை இந்த சுழலும் உணவகத்தில் அமர்ந்தபடி சுற்றுலாப் பயணிகள் ரசிப்பதுடன், வயிற்றுக்கும் சுவையாக காஷ்மீரின் பாரம்பரிய உணவுகளை ரசித்து சுவைத்து வருகின்றனர். இத்துடன் பனிச்சறுக்கு ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில் Ski Drag லிப்ட் வசதியும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுழலும் உணவகத்தின் மூலம் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என்று ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.
உலகின் மிக உயரமான சுழலும் உணவகம் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்த உணவகத்தில் அமர்ந்தபடி பரந்த பள்ளத்தாக்குகளின் மூச்சடைக்கக் கூடிய அழகிய காட்சிகளை 360 டிகிரி கோணத்தில் கண்டு ரசிக்க முடியும். அத்துடன் ஆசியாவின் மிக நீளமான ஸ்கை டிராக் லிஃப்ட்(ski drag lift) வசதியும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதுடன், குல்மார்க்கை உலகத் தரத்திலான குளிர்கால விளையாட்டு மையமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் கூறப்படுகிறது. இது சுற்றுலாத்துறையில் ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீர் அரசின் சுற்றுலாத் துறையானது, இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கவும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.