7 பேருக்கு வாழ்வளித்த 'குட்டித் தேவதை' வெண்பா: நேரில் சென்று ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்..!

stalin meets venba family
stalin meets venba familyimage source: hindutamil
Published on

கோவையில் மூளைச் சாவு அடைந்து, உறுப்பு தானம் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு அளித்த 8 வயது சிறுமி வெண்பாவின் பெற்றோர் இல்லத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். கோவை கவுன்சிலரின் மகளான வெண்பாவின் தியாகத்தைப் பாராட்டிய அவர், குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆதரவையும் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி 73வது வார்டு கவுன்சிலர் சோமு-சுகன்யா தம்பதியினரின் மகள் வெண்பா, மூளைச்சாவு அடைந்த பின் அவருடைய கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், தோல், எலும்பு ஆகியவை தானமாகப் பெறப்பட்டு 7 பேருக்கு வாழ்வளித்தன. கோவை வந்த முதல்வர் ஸ்டாலின், ரத்தினபுரியில் உள்ள வெண்பாவின் வீட்டிற்கு நேரில் சென்று வெண்பாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், சிறுமியின் புகைப்படத்திற்கு மலர் அஞ்சலியும் செலுத்தினார்.

சிறுமி வெண்பா கடந்த 23ஆம் தேதி(23.2.26) உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதன் காரணமாக திடீரென மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவை அவிநாசி சாலையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை, பிப்ரவரி 25ஆம் தேதி மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து மருத்துவர்கள் எடுத்துரைத்த நிலையில் சோமு தம்பதியினர் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முன் வந்தனர். மகளின் பிரிவால் வாடிய அந்த பெற்றோர்கள், அந்த இக்கட்டான சூழலிலும் ஒரு உன்னதமான முடிவை எடுத்தனர்.

அதன்படி உயிரிழந்த வெண்பாவின் கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் தனியார் மருத்துவமனையில் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மற்றொரு பயனாளிக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம், கண்கள், எலும்பு மற்றும் தோல் ஆகியவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வை கொடுத்துள்ளார் வெண்பா.

சிறுமி வெண்பாவின் இந்த உன்னதமான செயல், மருத்துவ மற்றும் சமூக மட்டத்தில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக தன் எக்ஸ் தளத்தில்,

உடலுறுப்புகளைக் கொடையளித்து இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள் ♥️

பெற்றெடுத்த அன்பு மகளை இழந்த வலியையும் தாங்கிக் கொண்டு, மாந்தநேயத்தோடு அந்தக் குழந்தையின் உடலுறுப்புகளைக் கொடையளித்த பெற்றோர் திரு. சோமு மற்றும் திருமிகு. சுகன்யா ஆகியோருக்கு நமது அன்பு ஆறுதலாய் துணை நிற்கட்டும்!

திரு. சோமு அவர்கள் நமது திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிர்வாகியாக இருந்து மக்களுக்குத் தொண்டாற்றுவதில் பெருமை கொள்கிறேன்.

உடலுறுப்புகளைக் கொடையளிப்பது குறித்து நான் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். அதேபோல், கொடையாளரின் இறுதி நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் எனக் கடந்த 23-09-2023 அன்று அறிவித்திருந்தேன். இதனைத் தொடர்ந்து, தங்களது உடலுறுப்புகளைக் கொடையளிப்போரின் எண்ணிக்கை தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மட்டுமல்ல; இந்திய மாநிலங்களிலேயே அதிகளவுக்கு அதிகரித்து வருகிறது. இதுவரையில், இறப்பிலும் பலருக்கு வாழ்வளித்த 653 பேருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அறிவியல் மனப்பான்மையோடு சிந்தித்துச் செயல்படும் தமிழ்நாடு வளரட்டும்!

இறப்பிலும் புதுவாழ்வளிக்கும் இந்தக் கருணை உள்ளங்களே போற்றுதலுக்குரிய தியாகிகள்!

என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு யார் தான் இடையூறு செய்றாங்க? சிவகார்த்திகேயன் சொன்ன பகீர் பதில்..!
stalin meets venba family

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com