

எம்எல்ஏக்கள் இல்லாமல் மக்கள் பாதிப்பு - திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திருச்சி கிழக்கு உள்ளிட்ட தமிழகத்தின் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் (தமிழக வெற்றிக் கழகம் - தவெக) சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விஜய் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
முதலமைச்சர் விஜய் முன்பு வெற்றி பெற்று பின்னர் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி மற்றும் விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர் ஆகிய ஐந்து தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதைக் காரணம் காட்டி இடைத்தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளதால் அத்தொகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்களுக்குரிய சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏ) இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள் என முதல்வர் விஜய் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யின் வெற்றியை எதிர்த்து, விஜயிடம் தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் எஸ். இனிகோ இருதயராஜ் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில், பிரச்சாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறி குழந்தைகளைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள முதல்வர் விஜய் ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளை கூறி ஒரு தேர்தலை செல்லாது என அறிவிக்க முடியாது என்றும், தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தேர்தலை ரத்து செய்வதற்கான தகுந்த காரணம் அல்ல என்றும் வாதிட்டுள்ளார். இந்த வழக்குகளின் அடுத்த கட்ட விசாரணை நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் தேர்தலை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் தெரிவித்தார். விஜய் தனது பிரச்சாரத்தின் போது குழந்தைகளை பயன்படுத்தியதன் மூலம் இந்திய தேர்தல் ஆணையம் பிப்ரவரி 5, 2024 அன்று பிறப்பித்த உத்தரவை மீறியதாக இருதயராஜ் குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு எதிரான நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்த தகவல்களை விஜய் மறைத்ததாகவும், தனது தேர்தல் செலவுகள் குறித்த விவரங்களை வழங்க தவறியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தனது தேர்தல் மனுவில் விஜய் குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வாக்குகளைப் பெறுவதற்காக, அவர்களை உணர்ச்சி பூர்வமாக குறி வைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும் வாக்காளர்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள் என்று குற்றம் சாட்டுவது மட்டுமே ஒரு தேர்தலை செல்லாததாக்கப் போதுமானதல்ல என்று விஜய் வாதிட்டார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலுமே அவர் வெற்றி பெற்றதை அடுத்து, திருச்சி கிழக்கில் அவர் ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து கரூர் எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகியோரும் ராஜினாமா செய்தனர்.
இதனிடையே இவர்களின் தேர்தல் வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தலை அறிவிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இதை அடுத்து ஐந்து தொகுதிகளிலும் இடைத்தேர்தலை அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது.
திருச்சி கிழக்கு தொகுதியில் 20 பேர் போட்டியிட்ட நிலையில், தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வாய்ப்பு இல்லை. மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 6 மாதங்களுக்குள் தேர்தல் ஆணையம், இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டும். எனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையம், இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். பாளையங்கோட்டைச் சேர்ந்த வெங்கடாஜலபதி தாக்கல் செய்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் விஜய் தனது பதில் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.