

தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் விஜய் தனது முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணமாக இன்று வியாழக்கிழமை (செப்.10-ம்தேதி) லண்டன் புறப்படுகிறார்.
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. முதலமைச்சரின் இந்த லண்டன் பயணம் மூலம் பல்வேறு முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் இன்று (செப்.10-ம்தேதி) இரவு 10 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், தனது பயணத்தை முடித்துக் கொண்டு செப்.16-ம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ளதாகவும் தமிழகக் காவல்துறையின் பாதுகாப்புப் பிரிவு சி.ஐ.டி (Security Branch CID) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான முன்-தயாரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக பிற அரசு உயர் அதிகாரிகள் ஏற்கனவே லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக இதுபோன்ற அரசுமுறைப் பயணங்களின் போது முதலமைச்சர்கள் தனி விமானங்களைப் பயன்படுத்துவதே வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இம்முறை பொதுமக்கள் பயணிக்கும் வழக்கமான பயணிகள் விமானத்திலேயே லண்டன் செல்ல முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பதால் தொழில்துறையினர் மிகவும் உற்றுநோக்கும் பயணமாக உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது, தொழில்முனைவோர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்திப்பது ஆகியவை இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கங்களாகக் கூறப்படுகிறது. லண்டனில் தங்கியிருக்கும் நாட்களில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல்கள், அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து பல்வேறு நிறுவனங்களிடம் முதலமைச்சர் எடுத்துரைக்க உள்ளார்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள்’ மாநாட்டில் 97 நிறுவனங்களுடன் ரூ.67,482 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், அதன் தொடர்ச்சியாக பிரிட்டனில் சில முக்கிய பன்னாட்டு நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோனில் நடைபெறும், தனது நெருங்கிய நண்பர் நடிகர் அஜித்குமாரின் கார் பந்தயத்தை முதல்வர் பார்க்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
ஏற்கெனவே, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய், தமிழகத்தில் இளைஞர்களிடையே மோட்டார் பந்தயங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி (Motorsport City) உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
ஃபார்முலா உள்ளிட்ட பன்னாட்டு பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேச தரத்திலான பந்தய தடம் (Circuits) மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த அறிவிப்புக்கு நடிகர் அஜித் நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பயணத்தின் ஒரு பகுதியாக லண்டனில் வசிக்கும் தமிழர்களையும் விஜய் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் முதன்மைச் செயலாளர்கள் மற்றும் வழிகாட்டி தமிழ்நாடு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் பயணம் மேற்கொள்கின்றனர். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் சென்னை வருகை காரணமாக பயணத்தில் மாற்றம் ஏற்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், திட்டமிட்டபடி பயணம் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதலமைச்சரின் இந்த பயணத்தின் போது முதன்மை செயலாளர்கள் மற்றும் வழிகாட்டி தமிழ்நாடு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் உடன் செல்ல உள்ளனர்.
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு தோராயமாக சுமார் ஒரு கோடி வரை செலவாகும் என தலைமைச்செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.