

சென்னை தலைமை செயலகத்தில் இன்று 300 புதிய பஸ்களின் சேவையை துவக்கி வைத்ததுடன் பஸ்ஸில் பயணமும் மேற்கொண்டார் தமிழக முதல்வர் விஜய். டீசலில் இயங்கும் 164 பஸ்களும், எரிவாயுவில் இயங்கும் 136 பஸ்களின் சேவையும் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் மொத்தம் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் என்று 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வருகின்றன. இதில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தைத் தவிர மீதமுள்ள 7 போக்குவரத்து கழகங்களுக்கும் தமிழக அரசு 300 புதிய டீசல் மற்றும் எரிவாயுவில் இயங்கும் பஸ்களை வாங்கி உள்ளது.
விஜயின் பிறந்தநாளன்று தொடங்கி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு, இதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் புதிய பஸ்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் தமிழக முதல்வர் இன்று காலை 10 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து இந்த 300 புதிய பஸ்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அத்துடன் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பெரம்பூர் வழித்தடத்தில் இயக்கப்படவுள்ள 29 ஏ புதிய பேருந்தில் ஏறி பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பயணம் மேற்கொண்டனர்.
பேருந்தில் டிக்கெட் எடுத்து பயணம் செய்த விஜய்:
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, கோவை உட்பட 6 கோட்டங்களுக்காக 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவைகளை இன்று முதல்வர் தொடங்கி வைத்தார். பின்னர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து பெரம்பூர் செல்லும் 29ஏ பேருந்தில் ஏறி ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பஸ்ஸில் ஏறியவுடன் பஸ் டிரைவரிடம் பஸ்ஸின் தரம் குறித்து கேட்டறிந்தார். பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் மேற்கொண்ட முதல்வர், நடத்துனரிடம் பணம் கொடுத்து பயணச்சீட்டும் வாங்கினார். அத்துடன் நடத்துனரை தமக்கு அருகிலேயே அமர வைத்து கலந்துரையாடியபடியே பயணித்தார். பின்னர் கண்டக்டருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
பின்பு ஓட்டுநர் அருகே முன்புற இருக்கைக்குச் சென்ற முதல்வர் தனது செல்போனில் சாலையில் நிற்கும் மக்களையும், பேருந்து பயணத்தையும் அவரே வீடியோவாக எடுத்தார். அப்போது சாலையோரம் நின்றிருந்த அரசு பேருந்துகளை ஒட்டி நின்றிருந்த ஓட்டுனர், நடத்துனர்கள் மற்றும் மக்களுக்கு கை அசைத்தபடியே சென்றார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை 29a பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய் பின்பு அதே பேருந்தில் தலைமைச் செயலகம் திரும்பினார்.
"ரொம்ப சந்தோஷமாக இருக்கு. முதலமைச்சர் மட்டும் இல்லை அவர் கூடப் பயணம் செய்த அனைவரும் டிக்கெட் வாங்கினாங்க. அவரோட பல நாள் கனவு பஸ்ல போறதுன்னு சொன்னாரு" என்று முதலமைச்சர் பயணம் செய்த மாநகரப் பேருந்து நடத்துனர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here