

முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் காரணமாக, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் மற்றும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டங்களின் தொடக்கத் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் விஜய் தனது லண்டன் பயணத்தை முடித்து கொண்டு சென்னை வந்ததையொட்டி இந்த திட்டங்களும் எப்போது தொடங்கப்பட உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (தவெக) அரசு, பள்ளி மாணவர்களுக்கும் தாய்மார்களுக்கும் பல்வேறு முக்கிய நலத்திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் என மாற்றப்பட்டது.
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் ஏற்கனவே அமலில் இருந்து வருகிறது. திமுக ஆட்சியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. தற்போதைய தவெக அரசு இத்திட்டத்தை 6 முதல் 8-ம் வகுப்பு வரை நீட்டிப்பு செய்திருக்கிறது. இதன் மூலம் கூடுதலாக சுமார் 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டத்தை பெரியாரின் பிறந்தநாளான இன்று (வியாழக்கிழமை), காமராஜர் படித்த விருதுநகரில் உள்ள பள்ளியில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பார் என்று ஏற்கனவே வெளியாகி இருந்தன. ஆனால் முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், முதலில் அறிவித்தது போல் 17-ம்தேதி திட்டத்தின் தொடக்க விழா சாத்தியமாகுமா? என்பது சந்தேகமாக இருந்தது. இப்போது 17-ம் தேதிக்கு பதிலாக வருகிற 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதலமைச்சர் விஜய் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சமூக நலத்துறை செயலாளர் பல்லவி பல்தேவ் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எழுதிய கடிதத்தில், இடைத்தேர்தல் நடைபெறும் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
அதேபோல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவிக்கும் திட்டமான ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் 15-ம்தேதி தொடங்கி வைப்பதாக இருந்தது. முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் மேற்கொண்டதால் இந்த திட்டமும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வரும் செப்டம்பர் 25-ம்தேதி மதுரையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் 1 கிராம் (22 கேரட்) தங்க மோதிரம் மற்றும் டயப்பர்கள், உடைகள் அடங்கிய 'பேபி வெல்கம் கிட்' (Baby Welcome Kit) பரிசாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.755.83 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதே நேரத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை உள்ளடக்கிய செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வராது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.