

தவெக அரசின் திட்டங்களை விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெகவின் ஒட்டுமொத்த திட்டங்களுக்கும் சேர்த்து 'தாய்மாமன் காது குத்தும் திட்டம்' என்று பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் பொழுது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றி கழகம் அரசின் திட்டங்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக அரசு தேர்தலின் பொழுது கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக செயல்படுத்தாமல் பாதி பாதியாக அரைகுறையாக மட்டுமே அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்று ஒரு திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதில் மக்கள் பயன்பெறுவதை விட விளம்பரங்களே அதிகம் உள்ளன. எனவே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்பதற்கு பதில் தாய் மாமன் காது குத்தும் திட்டம் என்றே பெயர் வைத்து விடலாம் என்று விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜயின் துறைகளான தமிழ்நாடு காவல்துறை-தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் பொழுது தவெகவின் ஒட்டுமொத்த திட்டங்களுக்கும் சேர்த்து 'தாய்மாமன் காது குத்தும் திட்டம்' எனப் பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மேலும், காவல்துறையின் கொள்கை விளக்க புத்தகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் குற்றங்கள் குறைந்து இருப்பதாக குறிப்பிட்டு இருப்பதும், கொலை, கலவரம், வழிப்பறி, பாலியல் குற்றங்கள் எல்லாம் குறைந்து இருப்பதாக கூறியிருப்பது திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்ததை நேர்மையாக ஒப்பு கொண்டதற்காக நன்றி என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தவெக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் அரைகுறையான அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுவதாக குற்றம் சாட்டினார். இத்தனை நாட்களில் புதிதாக கொண்டு வந்த திட்டங்களை விட பெயர் மாற்ற அறிவிப்புகள் தான் அதிகம் வருகிறது. இல்லை என்றால் திமுக கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்கிறது. பரந்தூர் விமான நிலையம், மாமல்லன் கால்வாய் என இதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம் என்று குறிப்பிட்டார். ஒன்று பெயரை மாற்றுகிறிர்கள் அல்லது திட்டத்தையே ரத்து செய்கிறீர்கள் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து பேசும் பொழுது திமுக ஆட்சியில் தமிழ்நாடு 'டாப் கியரில்' சென்று கொண்டிருந்தது. ஆனால் தவெக அரசு அமைந்த 116 நாட்களில் அது 'ரிவர்ஸ் கியரில்' சென்று கொண்டிருக்கிறது என்று கடும் விமர்சனம் செய்துள்ளார்.
விவசாயக் கடன் தள்ளுபடி, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள், அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்துள்ளீர்கள். ஆனால் வாக்குறுதிகளை முழுவதுமாக நிறைவேற்றாமல் அரைகுறையாக அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு உள்ளீர்கள்.
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" என்ற புதிய நலத்திட்டத்தை அறிவித்திருந்தது.முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி இத்திட்டம் முறைப்படி தொடங்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் அரசின் பிற அறிவிப்புகள் மக்களை முழுமையாக சென்றடையவில்லை என்பதை சுட்டிக் காட்டும் விதமாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த தங்க மோதிர திட்டத்தை காது குத்தும் திட்டம் என்ற விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.