

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று, விபத்தில் சிக்கி திருச்சி சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் இன்று (மார்ச் 23) உயிரிழந்தார்.
தஞ்சாவூரில் கடந்த மார்ச் 4ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரை மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாகத் தஞ்சாவூரை அடைந்தார். அப்போது விஜய்யின் வாகனத்தை ரசிகர்கள் பலரும் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தனர்.
இதில் திருச்சி -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குடி அருகே சென்றபோது, திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் ஓட்டிச் சென்ற பைக், பின்னால் வந்தவர்கள் மோதியதில் முன்னால் சென்ற கார் மீது மோதியது.
இதில் விக்னேஷும், பைக்கில் அவருடன் வந்த அவரது நண்பர் அருணும் காயமடைந்தனர். இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த விக்னேஷ் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தலையில் பலத்த காயமடைந்த அவர், தொடர்ந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.கடந்த 19 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தநிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.