

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. 59 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து விஜய் சாதனை படைத்தார்.
தமிழக முதலமைச்சர் விஜய், பதவியேற்ற நாள் முதல் மாநிலத்தின் நிதி நிலைமை, மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றில் அதிரடியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையே முதலமைச்சரின் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, தனிப்பட்ட உடை, மற்றும் நிர்வாக அணுகுமுறைகள் ஆகியவை சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளன.
முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவரின் செயல்பாடுகளில் சில விஷயங்கள் வரவேற்பையும், சில விஷயங்கள் சர்ச்சையையும் கிளப்பி வருகின்றன.
இதற்கிடையே சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க வருகை புரியும் பொது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
தலைமைச் செயலகத்திற்குள் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவு வளாகத்தில் இதற்கு முன்பு இருந்த திமுக, அதிமுக ஆட்சிக்காலங்களில் மக்கள் நேரடியாக சென்று புகார் அளித்து வந்தனர். ஆனால் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நேரடியாக வந்து புகாரளிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் தலைமைச் செயலகத்தில் தினமும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பாதுகாப்பு மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதாக தலைமைச் செயலகம் அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனவே இனிமேல் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வரும் பொதுமக்கள், தங்களின் மனுக்களை சமர்ப்பிப்பதற்காக தலைமைச் செயலகத்தின் வெளிப்புறத்தில் ஒரு புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு வராமல் தங்களது புகார்களை பெட்டியில் சமர்ப்பிக்கலாம் மற்றும் தலைமைச் செயலகத்திற்குள் வரும் கூட்டத்தையும் கணிசமாக குறைக்க முடியும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இனிமேல் உரிய அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தலைமை செயலகத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.