

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, கடந்த சில தினங்களாக எடுத்து வரும் தொடர் அதிரடி நடவடிக்கைகள் மற்றும் புதிய அறிவிப்புகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், தவெக அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அரசாணை தான், தற்போது ஒட்டுமொத்த தமிழக மக்களிடையேயும், அரசியல் வட்டாரங்களிலும் மிக முக்கியப் பேசும்பொருளாக மாறியுள்ளது.
இது குறித்து தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாகவும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதமும் தள்ளுபடி என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சொன்ன வாக்குறுதிக்கு மாறாக தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் வரை பயிர்க் கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையான தள்ளுபடியையும், அதற்கு மேல் பெற்ற விவசாயிகளுக்கான பயிர்க் கடன் தள்ளுபடியை விகிதங்களின் அடிப்படையிலும் அறிவித்துள்ளது அரசு.இந்த அறிவிப்பு வெளியானது விவசாயிகள் உள்பட பலதரப்பு மக்களையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.
இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. எனவே, இதை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளதுடன் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தலைமை செயலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பயிர் கடன் தள்ளுபடி என்பது இந்த அரசின் ஏமாற்று வேலை என்றும் ஒட்டுமொத்த சிறு குறு விவசாயிகளுக்கும் இந்த அரசு துரோகம் இழைத்து விட்டதாகவும் பயிர் கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது எனவும் பல்வேறு விமர்சனங்களை விவசாயிகள் கூறி வருகின்றனர்
தவெக அரசு தேர்தலின் போது ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி என வாக்குறுதி தந்தனர்.இப்போது ரூபாய் 50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கின்றனர். அரசின் செயல்பாடு விவசாயிகளுக்கு அழைக்கப்படும் அநீதி மற்றும் மாபெரும் நம்பிக்கை மோசடி எனவும் ஏற்கனவே 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என கூறிவிட்டு 500 யூனிட்டுக்கு மேல் அது கிடையாது என அதிர்ச்சி அளித்த அரசு தற்போது பயிர் கடன் விஷயத்திலும் விவசாயிகளை ஏமாற்றியதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் மற்றும் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் சோறு போடும் விவசாயிகளுக்கு தமிழக அரசு பிச்சை போட்டுள்ளது எனவும் கடந்த ஆட்சியில் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி குறித்த புள்ளி விபரங்களுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து "வாக்குறுதி மீறல்" என்ற ரீதியில் கடுமையான கண்டனங்களை தொடுக்கப்பட்டு வருவதால், கோட்டை வட்டாரம் தற்போது பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.