

பெற்றோரிடம் அடம் பிடித்து தவெகவுக்கு வாக்களிக்க செய்யுங்கள் என்று கூறிய விஜய்க்கு எதிராக கோவையில் விசிக நிர்வாகி பாலகிருஷ்ணன் என்பவர் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி சென்னையில் நடைபெற்ற பிரச்சாரத்தின் பொழுது சென்னை நந்தனத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் வீட்டில் உள்ள குழந்தைகளே உங்கள் பெற்றோரிடம் சொல்லி எனக்கு ஓட்டு போடச் சொல்லுங்கள் என விஜய் பிரச்சாரம் செய்தார். அதேபோல் விஜய் தனது கடைசி கட்டப் பிரச்சார உரையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள குழந்தைகளிடம் வாக்கு கேட்பது போல பேசினார். அதாவது குழந்தைகளான நீங்கள் எப்படி உங்களுக்கு சாக்லேட் வேண்டும் என்றால் அடம் பிடித்து சாக்லேட் வாங்குவீர்கள். அதுபோல விஜய் மாமாவுக்கு ஓட்டு போடச் சொல்லி உங்களது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை உள்ளிட்ட அனைவரிடமும் அடம் பிடியுங்கள் என்று கூறினார்.
விஜயின் தேர்தல் உரையின் காரணமாக குழந்தைகளிடையே உளவியல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் எனவே இது தொடர்பாக விஜய் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
விஜய் பேசியதைக் கேட்டு தனது 5 வயது மகன் அடம் பிடித்ததால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது என்றும், தன்னுடைய குழந்தையும் மனரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். தவெக தலைவர் விஜய் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.