

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால், காங்கிரஸ் சார்பில் இன்னும் பிரச்சாரம் தொடங்கப்படாத நிலை உள்ளது.
டெல்லியில் இன்று இரவு 8 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வது தொடர்பாக, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் இன்று இரவு 8 மணியளவில் டெல்லியில் நடைபெற உள்ளது.காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய வரும் 6ஆம் தேதி கடைசி நாள் என்பதால், இன்று இரவு நடைபெறும் இந்த முக்கியக் கூட்டத்தில் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, உடனடியாக காங்கிரஸ் தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோட்டு பரப்புரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசும்பொழுது இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி அறிவிக்க உள்ளார் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.