மல்யுத்த வீராங்கனைகளுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆதரவு!

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வழக்கு தொடர்ந்தனர்.

பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கில் டெல்லி காவல்துறை பதிலளிக்குமாறும், மனுதாக்கல் செய்த வீராங்கனைகளின் அடையாளம் தெரியாத வகையில், நீதித்துறை ஆவணங்களில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், மல்யுத்த வீரர்களின் இந்த தொடர் போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராடும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆறுதல் கூறிய பிரியங்கா காந்தி, சிறிது நேரம் அவர்களோடு பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த வீரர்கள் நம் நாட்டின் பெருமை. கடின உழைப்பாலும், போராட்டத்தாலும் நாட்டிற்காக பதக்கங்களை வெல்கின்றனர். அவர்களின் மீதான சுரண்டல், அவமானம். நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் அவமதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று முழு நாடும் விரும்புகிறது” என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com