

தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் உள்ள தேசியக் கட்சியான காங்கிரஸ், தொகுதிப் பங்கீடு குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய திராவிடக் கட்சியான திமுக (DMK) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) சுமார் 20 வருடங்களுக்கு மேலான நீண்டகால அரசியல் கூட்டணியாக உள்ளது. திராவிட இயக்க – தேசிய கட்சி இணைப்பாக பார்க்கப்படும் இந்த கூட்டணி 1967 முதல் பல கட்டங்களில் இணைந்து செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக 2004, 2019, 2024 மக்களவைத் தேர்தல்கள் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல் என அனைத்திலும் இக்கூட்டணி வலுவாகப் பலன் தந்துள்ளதோடு, தொகுதிப் பங்கீடும் (Seat Sharing) இதுவரை சுமுகமாகவே இருந்து வந்துள்ளது. பாஜக-வின் மத்திய அரசுக்கு எதிரான அரசியல், மாநில உரிமைகள், சமூக நீதி, மொழி உரிமை மற்றும் கூட்டாட்சித் தத்துவம் (Federalism) போன்ற பொதுவான கொள்கைகளே இக்கூட்டணியின் அடித்தளமாக உள்ளன. அவ்வப்போது சில கருத்து வேறுபாடுகள் எழுந்தாலும், அவை இதுவரை பெரிய பிளவாக மாறியதில்லை.
இந்த தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி மீதான எதிர்பார்ப்பு மேலும் மக்களிடையே அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் பாஜகவின் வலுவான கூட்டணி , வாக்குகளைப் பிரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் விஜயின் புதிய கட்சி தவெக என இம்முறை கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்தச் சூழலில், வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் இம்முறை கூடுதல் இடங்களை கோருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடன்கர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
கடந்த வாரம் கனிமொழி ராகுல் காந்தியை சந்தித்து பேசி இருந்ததாகவும் அதில் கூட்டணி குறித்த தகவல்கள் பற்றி கலந்துரையாடியதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் ஆட்சி அதிகாரத்தை உறுதி செய்யவும், நிச்சயமாக 36 தொகுதிகளில் போட்டியிடவும் ,உள்ளாட்சியில் பங்கு வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் இம்முறை கூடுதல் இடங்களை கேட்கும் நிலையில் இந்த கூட்டணி குறித்து இன்னும் திமுக முறையான குழு அமைக்காத பட்சத்தில் காங்கிரஸ் ஒரு குழு அமைத்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதுவரை எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கண்டு நீண்ட கால கூட்டணி அரசியல் செய்யும் திமுக காங்கிரஸ்-ன் தேர்தல் மற்றும் எதிர்கால நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள அரசியல் ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர்.