மோடியை எதிர்த்து களமிறங்கும் பிரியங்கா காந்தி!

மோடியை எதிர்த்து களமிறங்கும் பிரியங்கா காந்தி!

2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி இருமுறை வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடவேண்டும் என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராகப் பொறுப்பு ஏற்றிருக்கும் அஜய் ராய் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

உ.பி. காங்கிரஸ் வட்டாரத்தில் பாகுபலி (அதாவது பலம் மிகுந்தவர்) என அறியப்படுபவர் இந்த அஜய் ராய்.

பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேசத்தில் இருகும் எந்தத் தொகுதியில் வேட்பாளராக நின்றாலும், அவர் நிச்சயமாக வெற்றி பெறுவார். ஆனால், அவர் இந்த முறை வாரணாசி தொகுதியில் போட்டியிடவேண்டும்! நாங்கள் முழு மூச்சுடன் தேர்தல் பணியில் ஈடுபட்டு அவரை வெற்றிபெறச்செய்வோம்! அதற்கான கோரிக்கையை முறைப்படி கட்சித் தலைமைக்கு விரைவில் அனுப்பி வைக்க இருக்கிறோம்!” என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்பாக நடைபெற்ற 2014 மற்றும் 2019 பாராளுமன்றத் தேர்தல்களில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டி இட்டவர் இதே அஜய் ராய்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

2014 தேர்தலில், 75 ஆயிரத்து 600 வாக்குகளும், 2019 தேர்தலில் ஒரு லட்சத்து 52 ஆயிரம் வாக்குகளும் பெற்று மோடியிடம் தோற்றுப் போனார் அஜய் ராய். அதற்கு முன்பாக, 2009ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க. வேட்பாளரான டாக்டர் முரளி மனோகர் ஜோஷியை எதிர்த்து சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராக அஜய் ராய் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தது குறிப்பிடத் தக்கது.

சொல்லப்போனால், 1991 முதல் நடைபெற்ற அனைத்து பாராளுமன்றத் தேர்தல்களிலும், 2004ஆம் ஆண்டு தவிர மற்றவை அனைத்திலும் வாரணாசி தொகுதியை பா.ஜ.க. தான் கைப்பற்றி வருகிறது.

பிரியங்காவுக்கு வாரணாசி என்றால் ராகுலுக்கு எந்தத் தொகுதி? அவர் மீண்டும் அமேதியில் களமிறங்குவாரா? என்ற கேள்விக்கு, “ அமெதி தொகுதி மக்கள், ராகுல் காந்தி, இந்த தடவையும் அமேதியில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்துவதாகத் தெரிவித்திருக்கிறார்.

கட்சிக்காரர்கள் மத்தியில் இது பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் தெரியுமா? வாரணாசி தொகுதியில், பா.ஜ.க.விடம் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் அஜய் ராய், இந்த முறை பாதுகாப்பான தொகுதி ஒன்றில் போட்டியிட விரும்புகிறார். அதற்காகவே, பிரியங்காவின் பெயரை இழுக்கிறார்! பிரியங்கா தேர்தலில் போட்டியிடுவாரா என்பது சந்தேகமே! ஒரு வேளை அவர் போட்டியிட்டாலும், இந்திரா காந்தி போட்டியிட்ட ரேபரேலியில்தான் போட்டியிடுவார தவிர, வாரணாசி பக்கம் வரமாட்டார்!” என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com