

வங்கிக் கடன்களைப் பொறுத்தவரை தனிநபர் கடனுக்கு தான் வட்டி அதிகம். கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி இல்லையென்றாலும், தவணையை செலுத்தத் தவறினால் அபராதம் அதிகமாக விதிக்கப்படும். ஆகையால் தான் கடன் தவணைகளை குறித்த நேரத்தில் செலுத்தி விட வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் அறிவுரைக்கின்றனர்.
தவணைத் தொகையை செலுத்தத் தவறும் போது, அது உங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அப்படியான ஒரு பாதிப்பை தான் பெங்களூருவைச் சேர்ந்த நபர் சந்தித்துள்ளார். பெங்களூருவில் கிரெடிட் கார்டு கடன் பெற்ற ஒருவருக்கு, வெறும் 46 பைசா நிலுவைத் தொகை இருந்ததாக கூறி ரூ.1,200 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
1 ரூபாய்க்கும் குறைவான நிலுவைத் தொகை குறைவாக இருந்ததற்கா இவ்வளவு பெரிய அபராதம் என அந்த நபர் உடனே வங்கியை நாடினார்.
கிரெடிட் கார்டு கடனுக்கான தவணைத் தொகை குறித்த தேதியில் ஆட்டோமெட்டிக் முறையில் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த அபராதமும் ஆட்டோமெட்டிக் முறையில் தான் விதிக்கப்பட்டுள்ளது என வங்கி நிர்வாகம் தெரிவித்தது.
மேலும் இந்த அபராதத்தை வங்கி நிர்வாகம் ரத்து செய்ததோடு, பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்தது. இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அனைத்துமே ஆன்லைன் வசமாகி விட்டது. கடனுக்கான தவணைத் தொகையும் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் இருந்தே மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பிடித்தம் செய்யப்படும். ஆகையால் தவணைத் தேதிக்கு முன்பாகவே தவணைத் தொகையை வங்கிக் கணக்கில் இருப்பு வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படுவதோடு, உங்கள் சிபில் ஸ்கோரும் குறைந்து விடும்.
இன்றைய நவீன உலகில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, டிஜிட்டல் பயன்பாடும் அதிகரித்துள்ளது. ஷாப்பிங் முதல் வங்கிக் கடன் வரை வீட்டிலிருந்தே பெற முடியும் என்ற சூழல் உருவாகி விட்டது. இந்த சூழல் தான் இளம் தலைமுறையினர் பலரையும் சோம்பேறி ஆக்கி விட்டது என்பதை மறுக்கவே முடியாது.
குறிப்பாக Gen-Z தலைமுறையினர் பலரும் வருமானத்தைப் பெருக்கும் வழிகளைக் காட்டிலும், கடன் வாங்குவதைத் தான் அதிகம் விரும்புகின்றனர்.
அவசரத் தேவைக்காக கடன் வாங்குவது வேறு. ஆனால் Gen-Z தலைமுறையினர் கடன் வாங்கி செலவு செய்து விட்டு, பிறகு செலுத்திக் கொள்ளலாம் என்ற மனநிலையில் தான் கடன் வாங்குகின்றனர். இந்தப் போக்கு தொடர்ந்தால், வருங்காலத்தில் இளைஞர்கள் பலரும் கடனாளிகளாக தான் இருப்பார்கள். இதனைக் கருத்தில் கொண்டு தான் சமீபத்தில் Gen-Z தலைமுறையினரை நினைத்து கவலை கொள்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
கடந்த நிதியாணிடில் மட்டும் கிரெடிட் கார்டு கடன் மூலமாக ரூ.3 லட்சம் கோடி நிலுவைத் தொகை இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. செலவு செய்வதற்காகவே கடன் வங்குவது தற்போது அதிகரித்துள்ளதால், இன்னும் சில ஆண்டுகளில் பல லட்சம் பேர் நிதி நெருக்கடியில் சிக்குவார்கள் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
25 வயதிலேயே தனிநபர் கடன் மற்றும் கிரெடிட் கார்டுகளை இவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்தப் பழக்கம் வெகு விரைவிலேயே இளைஞர்களுக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தி விடும் என ரிசர்வ் வங்கி கவலை கொண்டுள்ளது. நிதி நெருக்கடி ஏற்படும் சூழலிலும் கடன் வாங்கவே நினைப்பார்கள் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
வங்கிக் கடன்கள் மிக எளிதாக கிடைப்பதும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆய்வு முடிவுகளின் படி, Gen-Z தலைமுறையினர் சொந்தமாக வீடு கட்டக் கூடத் தயாராக இல்லை எனவும், வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலை அதிகரித்திருப்பதாகவும் தரவுகள் கூறுகின்றன.
இருப்பினும் நிதி சுதந்திரம் பெறுவதில் இளைஞர்கள் விழிப்புடன் இருந்தால், கடன் பெறுவதைத் தவிர்த்து சேமிப்பில் கவனம் செலுத்துவர். ஆனால் இதற்கு இளைஞர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம்.