சென்னையில் 6000 பேர் எதற்காக ஓடினார்கள் தெரியுமா?

சென்னையில் 6000 பேர் எதற்காக ஓடினார்கள் தெரியுமா?

ண்மையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் பள்ளிக்கு முன்பாக அதிகாலை நேரத்தில் சுமார் 6000 பேர் கூடினார்கள். ஊக்கப் பேச்சாளர் நீரஜா மாலிக், கொடியசைத்து துவக்கி வைக்க, அவர்கள் ஓடத்துவங்கினார்கள்.

எதற்காக அவர்கள் ஓடினார்கள் தெரியுமா?

புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நன்கொடை திரட்டுவதும், புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை அளிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இந்த ஓட்டத்தின் நோக்கமாகும். பங்கேற்பாளர்கள் தங்கள் வசதிக்கும், திறமைக்கும் ஏற்ப 3 கி.மீ / 6 கி.மீ / 10 கி. மீ. என தூரத்தைத் தேர்ந்தெடுத்துப் பங்கேற்கலாம். இந்த தூரத்தை அவர்கள் ஓடியோ அல்லது நடந்தும் கடக்கலாம்.

இந்தப் புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்துக்கு “டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டம்” என்று பெயர். அதென்ன டெர்ரி ஃபாக்ஸ்?

'டெர்ரி' ஃபாக்ஸ் கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு தடகள வீரர் மற்றும் புற்றுநோய் செயற்பாட்டாளர் ஆவார். அவர் தன் ஒரு காலை இழந்தை நிலையிலும், தனது செயற்கைக் காலுடன் புற்றுநோய் ஆராய்ச்சிக்கு நிதி திரட்டுவதற்காக கனடாவில் நடத்தப்பட்ட 'மாரத்தான் ஆஃப் ஹோப்” என்ற கண்டம் கடந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று உலகத்தின் கவனத்தை ஈர்த்தார்.

டெர்ரி ஃபாக்ஸ்
டெர்ரி ஃபாக்ஸ்

அதனை அடுத்து, டெர்ரி ஃபாக்ஸ் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் விழிப்புணர்வுக்கான நம்பிக்கை மாரத்தான் ஓட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார். 1981ல் அவர் மறைந்துவிட்டாலும், அவர் தொடக்கிவைத்த பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

சென்னையில் எதற்காக 'டெர்ரி' ஃபாக்ஸ் ஓட்டம் நடத்தப்படுகிறது?

கனடாவின் டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டத்தால் ஈர்க்கப்பட்ட இந்தியாவின் ஆகாஷ் துபே 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஓட்டத்தை சென்னைக்கு கொண்டு வந்தார். ஆகாஷ் இன்று நம்முடன் இல்லாவிட்டாலும், அவரது குடும்பத்தினர் சென்னை கிழக்கு ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ஆண்டுதோறும் இந்த ஓட்டத்தினை சென்னையில் வெற்றிகரமாக நடத்தி வருகின்றார்கள். இந்த ஆண்டு சென்னை கனடாவின் டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில் ஆகாஷ் துபேவின் தாயார் சுஜாதா துபே பங்கேற்றார்.

அவர், “என் மகன் ஆகாஷ் துபே இன்று நம்மிடையே இல்லையென்றாலும் அவனது முயற்சியால் சென்னையில் துவக்கப்பட்ட சென்னை டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டத்தினை ரோட்டரி சங்கம் தொடர்ந்து நடத்தி வருவதற்குத் ஏனது பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியதுடன் இந்த ஓட்டத்தில் பங்கேற்ற ஆர்வலர்களையும் வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், சர்வதேச ரோட்டரி மாவட்டம் 3232 ன் ஆளுநர் ரவி ராமன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். சென்னை கிழக்கு ரோட்டரி சங்கத் தலைவர் பாபு கிருஷ்ணமூர்த்தி, புற்றுநோய் ஆலோசகரும், ஊக்கப் பேச்சாளருமான, நீரஜா மாலிக், ஆகியோரும் கலந்துகொண்டார்கள். “இந்த ஆண்டு டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டத்தின் மூலமாகக் கிடைத்த ரூ.15 லட்சம், அடையார் கேன்சர் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது” என்று பாபு கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com