பாஜக எம்பி-ன் சர்ச்சைப் பேச்சு:உரிமை மீறல் குழு விசாரிக்க கோரிக்கை!

பா.ஜ.க. எம்பி ரமேஷ் பிதூரி
பா.ஜ.க. எம்பி ரமேஷ் பிதூரி

க்களவையில் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் குன்வர் டேனிஷ் அலிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த பா.ஜ.க. உறுப்பினர் ரமேஷ் பிதூரிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் இது தொடர்பாக உரிமை மீறல் குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

பிதூரியின் கருத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அவையில் வருத்தம் தெரிவித்த நிலையில் மீண்டும் இதுபோன்று நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிதூரிக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்றுவந்த நிலையில் மக்களவையில் வியாழக்கிழமை இரவு சந்திரயான் வெற்றி குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் குன்வர் டேனிஷ் அலி குறித்து பா.ஜ.க. எம்.பி. பிதூரி, சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தார். அவர் சார்ந்த மத அடையாளங்கள் மற்றும் நடைமுறைகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

பிதூரியின் செயலுக்கு வருத்தம் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அவரது பேச்சு அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது என்றார்.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், மக்களவையில் பிதூரி தெரிவித்த கருத்து அனைத்து உறுப்பினர்களையும் அவமதிப்பது போல் உள்ளது. பாதுகாப்பு அமைச்சர் வருத்தம் தெரிவித்தது வெறும் கண்துடைப்பு நாடகமாகும். பிதூரியை அவையிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றார்.

மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தகைய வெறுப்புப் பேச்சுக்கு எந்த சலுகையும் காட்டக்கூடாது. பிதூரியை கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா, தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முஸ்லிம்கள் மற்றும் ஓ.பி.சி. பிரிவினரை அவமதிப்பது பா.ஜ.க.வின் உட்கட்சி கலாசாரமாக உள்ளது. பிதூரிக்கு எதிராக பிரதமரும், மக்களவைத் தலைவரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அவையில் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பியதற்காக நான் இடைநீக்கம் செய்யப்பட்டேன். இப்போது உறுப்பினர் டேனிஷ் அலிக்கு எதிராக அவையில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பா.ஜ.க. எம்.பி. பிதூரி விமர்சிதித்துள்ளார். அவர் மீது என்ன நடவடிக்கை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த தெற்கு தில்லி எம்.பி.யான பிதூரிக்கு பா.ஜ.க. விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே ரமேஷ் பிதூரி மீது மக்களவைத் தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமது எம்.பி. பதவியை ராஜிநாமாச் செய்யப்போவதாக டேனிஷ் அலி கூறியுள்ளார். நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒலித்த வெறுப்புப் பேச்சு  இப்போது நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வந்துவிட்டது என்றார் அவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com