Narendra Modi
Narendra Modi

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – மர்ம நபரால் பரபரப்பு!

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு மர்ம நபர் என்.ஐ.ஏ கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்புக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் இந்தியில், “பிரதமர் மோடியை கொன்று விடுவேன்.” என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 5 கட்டங்கள் முடிந்துவிட்டன. இதனையடுத்து இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன. இந்த இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறும் தொகுதிகளில் தீவிரமாகப் பிரச்சாரம் நடந்து வருகிறது. பிரதமர் மோடியும் அந்தத் தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார். 6ம் கட்ட வாக்குப்பதிவிற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. வரும் ஜூன் 1ம் தேதி 7ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதனையடுத்து ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

சமீபத்தில் தொலைக்காட்சி நேர்க்காணல் ஒன்றில் பேசிய நரேந்திர மோடி, “என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன்.

சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன். என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக ஒரு மனிதாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்.” என்று பேசியிருந்தார்.  

அந்தவகையில்தான், தற்போது பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்புக் கொண்ட ஒரு மர்ம நபர், “மோடியை கொலை செய்வேன்.” என்று ஹிந்தியில் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இதையடுத்து, என்.ஐ.ஏ அதிகாரிகள், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் அளித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
“நான் மனிதனே அல்ல…” – பிரதமர் மோதி!
Narendra Modi

என்.ஐ.ஏ அளித்தப் புகாரை அடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சைபர் கிரைம் போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்.ஐ.ஏ கண்ட்ரோல் ரூமைத் தொடர்பு கொண்டு பேசிய நபர், எங்கிருந்து பேசினார் என நெட்வொர்க் சிக்னலை வைத்து கண்டறியும் பணி நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் நேரத்தின்போது பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடப்பட்ட இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com