பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று டெல்லி காவல் துறை அறிவிப்பு!

பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது  முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று டெல்லி காவல் துறை அறிவிப்பு!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இன்று ஏப்ரல் 28 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று டெல்லி காவல் துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராஙகனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினர்.

இந்நிலையில், நடவடிக்கை எடுக்கப்படாததால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பிரிஜ் பூஷன் மீது இன்று ஏப்ரல் 28 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று டெல்லி காவல் துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் டெல்லி காவல் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தரப்பில் மூத்த வழக்கறிஞரான கபில் சிபில் ஆஜராகி மைனர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக குற்றம்சாட்டி தனது பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, "ஆவணங்களில் உள்ள தரவுகளை வைத்து பார்க்கும் போது, மைனர் வீராங்கனைக்கு தேவையான பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று டெல்லி காவல் துறை ஆணையருக்கு உத்தரவிடுகிறோம்," என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இது குறித்து "இது வெற்றியின் முதல்படி, ஆனாலும் எங்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்," என்று மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com