மத்திய அரசுக்கு எதிராக தென்னிந்தியா போர்க்கொடி! 5 மாநில முதல்வர்கள் 'எக்ஸ்' (X) தளத்தில் கடும் கண்டனம்..!

Civil Laws
India parliment
Published on

இன்று நடைபெற இருக்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் அரசியலமைப்பு 131-வது திருத்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் அனைத்து மாநிலங்களின் நலன்களும் பாதுகாக்கப்படும் என பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் கூறிவரும் நிலையில் இதன் மூலம் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்கும் முயற்சி என தென்னிந்திய மற்றும் மேற்கு வங்க முதல்வர்கள் அதற்கு எதிரான தங்கள் கருத்துக்களை எக்ஸ் தளத்தில் பதிந்து வருகின்றனர்.

அவற்றின் சுருக்கம் இங்கு..

"போதுமான விவாதங்கள் இல்லாமல் முன்னெடுக்கப்படும் தொகுதி மறு வரையறை மசோதாவை உடனடியாக கைவிட வேண்டும். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை தொகுதி மறு வரையறை மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைக்காமல் உடனடியாக அமல்படுத்த முடியும் . அமல்படுத்த வேண்டும்"- பினராயி விஜயன், கேரள முதலமைச்சர்

"விந்தய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போய் இருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பாஜக. தொகுதி மறு வரையறைக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும் பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்"- மு க ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

"மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை திணிக்கும் முயற்சி பாஜாவுக்கு குறுகிய கால அடிப்படையில் பலனளிக்கலாம் . ஆனால் அது தென்னிந்திய மற்றும் சிறிய மாநிலங்களுக்கு நியாயமற்ற முறையில் இருந்தால் அது நம் நாட்டை பலவீனப்படுத்தும்"- ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா முதலமைச்சர்

"தொகுதி மறு வரையறை என்பது வெறும் இடங்களை அதிகரிப்பதற்கான விஷயம் மட்டுமல்ல. யார் அதனால் பயன் பெறுகின்றனர் என்பதையும் பற்றியது. தற்போதைய அணுகுமுறை சில பெரிய மாநிலங்களில் அதிகாரத்தை அதிகமாக குவிக்கும் அபாயத்தை உருவாக்குகிறது"- சித்தராமையா , கர்நாடக முதலமைச்சர்

"மேற்கு வங்கத்தையும் இந்தியாவையும் பிரிப்பதற்காகவே பாஜக தொகுதி மறு வரையறை மசோதாவை முன்வைக்கிறது பெரும்பான்மை இல்லாத சூழலில் அரசியல் வளம் பெறும் நோக்கத்துடன் அவர்கள் இதை செய்கிறார்கள்"- மம்தா பானர்ஜி , மேற்கு வங்க முதலமைச்சர்

குறிப்பாக இந்த மசோதா மக்கள் தொகை அடிப்படையில் அமைந்தால் மக்கள் தொகை கட்டுப்பாடு செய்து குடும்ப திட்டமிடலில் முன்னிலையில் இருக்கும் தென்னிந்திய மாநிலங்கள் பாராளுமன்ற இடங்களை இழக்கும் வாய்ப்பு அமையும் என்பதால் இதை எதிர்ப்பதாக கூறப்படுகிறது.

இவர்களது எதிர்ப்பை ஏற்று மத்திய அரசு பின்வாங்குமா அல்லது மசோதாக்கள் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: டெல்லியில் ஒன்று திரண்ட எதிர்க்கட்சிகள்.! தொகுதி மறுவரையறைக்கு எதிராக கனிமொழி நோட்டீஸ்!
Civil Laws

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com