

நீங்கள் UPI PIN-ஐ உள்ளிட்டுப் தவறுதலாக வேறு ஒருவருக்கு பணம் அனுப்பிவிட்டால் எளிதில் திரும்ப பெற இயலாது. இருப்பினும், பணத்தைப் பெறுநரிடம் திருப்பிக் கொடுக்குமாறு நீங்கள் கோரலாம்; அல்லது முறையான குறைதீர்க்கும் வழிகள் வாயிலாக அப்பணத்தை மீட்க முயற்சிப்பதற்கு, உங்கள் வங்கியிடமோ அல்லது UPI செயலியிடமோ உதவி நாடலாம்.
யுபிஐ (UPI) என்பது யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) என்பதன் சுருக்கமாகும். அதாவது இந்தியாவில் வங்கிக் கணக்குகளுக்கு இடையே உடனடி பணப்பரிமாற்றம் செய்ய உதவும் ஒரு டிஜிட்டல் அமைப்பாகும். இது இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் மூலம் உடனடியாகப் பணம் அனுப்பவும் பெறவும் உதவும் ஒரு டிஜிட்டல் கட்டண முறையாகும். இது கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனையில் உலகுக்கே இந்தியா முன்னோடியாக இருந்து வருகிறது. எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், கடந்த சில வருடங்களாக இந்தியாவில் சாலையோரை கடை முதல் மிகப்பெரிய மால்கள் வரை அனைத்திலுமே யு.பி.ஐ. பரிமாற்றம்தான் முன்னிலை வகிக்கிறது.
இதனால், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. அதனால் தான் இன்று மக்கள் மொபைலில் யுபிஐ ஆப்களில் பணம் இருக்கிறதே என்ற எண்ணத்தில் யுபிஐ-ன் கைகளில் தங்களது சிறிய சிறிய பணப்பரிவர்த்தனையை கூட ஒப்படைத்துவிட்டனர்.
ஒரு சில நேரங்களில், நமக்கே தெரியாமல் தவறுதலாக ஒருவருக்கு அனுப்ப வேண்டிய பணத்தை வேறுஒருவருக்கு அனுப்பிவிட்டு சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். யூபிஐ ஐடி தவறாக இருப்பது, டைப் செய்யும் போது எழுத்துப்பிழை (தட்டச்சுப் பிழை) ஏற்பட்டிருப்பது அல்லது உங்கள் தொடர்புகளிலிருந்து தவறான பெயரைத் தேர்ந்தெடுத்திருப்பது போன்ற காரணங்களால் அப்படி நடக்கலாம்.
அப்படி வேறு யாருக்காவது தவறுதலாக யுபிஐ மூலம் பணம் அனுப்பிவிட்டு எப்படி திரும்பிபெறுவது என்ற பெரிய குழப்பத்தில் ஆழ்ந்துவிடுகின்றனர். இதனால் சிலர் மிகுந்த மனவேதனையும், மனஉளைச்சலுக்கும் ஆளாகி விடுகின்றனர். ஆனால் அப்படி தவறுதலாக மற்றொருவருக்கு பணத்தை அனுப்பி விட்டால் அதை திரும்ப பெறுவது மிகவும் கடினம். எனவே, நீங்கள் அடுத்து எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை. அப்படி உங்கள் பணத்தை யுபிஐ மூலம் தவறுதலாக அனுப்பிவிட்டால் எப்படி திரும்ப பெறுவது என்ற வழிமுறைகளை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
* UPI மூலம் வேறு ஒருவருக்கு தவறாக பணம் அனுப்பிவிட்டால், Paytm (அ) GPay சாட் மூலம் அவரை தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்று பேச வேண்டும். ஒரு சிலர் உண்மையை புரிந்துகொண்டு பணத்தை திருப்பி அனுப்பி விடுவர். ஆனால் உங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை என்றாலோ, அல்லது அந்த நபர் பணத்தைத் திருப்பிக் கொடுக்க மறுத்தாலோ, நீங்கள் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
* Google Pay, PhonePe, Paytm போன்ற நீங்கள் பயன்படுத்திய செயலிக்குச் சென்று, அந்தப் பரிவர்த்தனையை (Transaction) தேர்வு செய்யவும்.
அதில் "Help", "Get Help" அல்லது "Raise a Issue" என்ற ஆப்ஷனைப் பயன்படுத்திப் புகார் பதிவு செய்யவும்.
* உடனடியாகப் புகார் அளிக்க, உங்கள் யூபிஐ செயலி அல்லது உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவையைப் பயன்படுத்தலாம். இதிலும் உங்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்றால்,
* உங்கள் வங்கியின் முயற்சி தோல்வியடைந்தால், BHIM செயலி அல்லது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) இணையதளத்தில் Dispute Redressal Mechanism மூலம் புகார் செய்யலாம். NPCI கட்டணமில்லா எண்: 1800-120-1740.
பரிவர்த்தனை ஐடி, தொகை, தேதி மற்றும் யுபிஐ ஐடிகள் உள்ளிட்ட தேவையான விவரங்களுடன் படிவத்தைச் சமர்ப்பிக்கவும். இதிலும் உங்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என்றால் இந்த விஷயத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
* அதில் தீர்வு ஏற்படாவிட்டால், ஒவ்வொரு வங்கியிலும் ஒரு குறைதீர்ப்பு அமைப்பு உள்ளது. அங்கு சென்று புகார் அளிக்க வேண்டும்.
* வங்கியாலும் இந்த விஷயத்தைத் தீர்க்க முடியவில்லை என்றால், ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாளர் திட்டத்தின் கீழ், புகார் மேலாண்மை அமைப்பு மூலம் புகார் அளித்து நீங்கள் ரிசர்வ் வங்கி குறைதீர்ப்பாளரைத் தொடர்பு கொள்ளலாம்.
* நீங்கள் ஒவ்வொரு படியையும் துல்லியமாகப் பின்பற்றினாலும், உங்கள் பணம் திரும்பக் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பது தான் உண்மை. உங்களுடைய பணத்தைப் பெற்றவர் அதைத் திருப்பித் தர திட்டவட்டமாக மறுத்தால், மேலும் அதில் மோசடியோ அல்லது கணினிப் பிழையோ இல்லை என்றால், வங்கியால் அந்தப் பரிவர்த்தனையை எளிதாக ரத்து செய்ய முடியாது. அந்த நிலையில் அது ஒரு வங்கிப் பிரச்சினையாக இல்லாமல், சட்டப்பூர்வமான விஷயமாகி மாறிவிடும்.
பணத்தை மீண்டும் பெறுவதில் உள்ள முக்கிய அம்சங்கள்:
* பணம் பெற்றவர் ஒத்துழைத்து பணத்தைத் திரும்பத் தந்தால் மட்டுமே, அதை எளிதாக மீட்டெடுக்க முடியும்.
* தவறான பரிவர்த்தனையை 30 நாட்களுக்குள் புகார் செய்வது அவசியம்.
* 30 நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால், நீங்கள் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பரிவர்த்தனை குறைதீர்ப்பாளரை (Ombudsman) அணுகலாம்.
யூபிஐ வசதியைப் பொறுத்தவரையில், உங்கள் பணத்தைத் திரும்பப் பெற முயற்சிப்பதை விட, முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம். எனவே யூபிஐ மூலம், பணத்தை அனுப்பும் முன், பெறுநரின் UPI ஐடி மற்றும் பெயரை எப்போதும் இருமுறை சரிபார்த்து மிகவும் கவனமாக இருந்தாலே இதுபோன்ற பிரச்சினைகளே ஏற்படாது.