கனகசபை மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்வதால் தீட்சிதர்களுக்கு என்ன பிரச்னை? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கனகசபை மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்வதால் தீட்சிதர்களுக்கு என்ன பிரச்னை? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்வதால், தீட்சிதர்களின் உரிமை எப்படி பாதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. சிதம்பரம் கோயில் எங்களுடைய நிர்வாகத்திற்கு உட்பட்டது என்று பொது தீட்சிதர்கள் கூறிவரும் நிலையில் சாமானிய பக்தர்களின் கேள்வியை சென்னை உயர்நீதிமன்றம் பிரதிபலித்திருக்கிறது என்கிறார்கள்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசனம், ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட உற்சவங்கள் முக்கியமானவை. மூலவரை வீதியுலாவுக்கு அழைத்துச் செல்லும் வழக்கும் இருப்பதால் மூன்று நாட்களுக்கு கனகசபை மீது தீட்சிதர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. தடையை மீறி கனகசபை மீது பக்தர்கள் ஏறுவதும், சர்ச்சையாவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

இவ்வாண்டும் ஆனி திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு ஜூன் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அதை இந்தி சமய அறநிலையத்துறை ஊழியர்கள் நீக்கி, கனகசபைக்குள் நுழைந்து வழிபாடு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கனக சபையில் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து கடந்த ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் உத்தரவு, கோயில் நடைமுறைகளுக்கும் அது குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கும் முரணாக இருப்பதாகவும் வழக்கு விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.

ஏழு முதல் பத்து பேர் வரை மட்டும் தரிசனம் செய்யும் அளவில் மட்டுமே உள்ள கனகசபை மண்டபத்தில் ஆயிரரகணக்கான பக்தா்களை அனுமதிப்பது இடநெருக்கடியை ஏற்படுத்திவிடும் என்றும், கோயிலுக்கு வருபவர்களில் ஒரு சிலரை மட்டுமே அனுமதிப்பது பாரபட்சமாகிவிடும். கனகசபையில் நடைபெறும் பூஜைகள், அபிஷேகங்களையும் பாதிக்கும். ஆகவே, கனகசபையில் ஏறுவதை தடை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்பான ஏராளமான வழக்குகளை முன்வைத்தது. கனகசபை மீது ஏறி பக்தர்கள் நடராஜரை தரிசனம் செய்வதால் தீட்சிதர்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை விளக்க வேண்டும். அவ்வாறு பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் ஏன் உச்சநீதிமன்றத்திற்கு ஏன் செல்லவில்லை? தீட்சிதர்களின் நலன் பாதிக்கப்படுவதாக ஏன் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று ஏராளமான கேள்விகளை எழுப்பினார்கள்.

உயர்நீதிமன்றத்தின் கேள்விகள் பொது தீட்சிதர்கள் தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவிற்கு தடை வழங்க மறுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் மாதம் தள்ளி வைத்திருக்கிறார்கள். இதற்கிடையே பொது தீட்சிதர்கள் தரப்பு, தங்களின் உரிமை பாதிக்கப்படுவதாக கூறி உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com