
தீபாவளி பண்டிகை வரும் 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அக்டோபர் 16 முதல் 19ஆம் தேதி வரை 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.தீபாவளி பண்டிகை முடித்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்ப வசதியாக அக்டோபர் 21 முதல் 23 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 16 முதல் 19 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2092 பேருந்துகளுடன் 5710 சிறப்பு பேருந்துகள் என்று 4 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,268 பேருந்துகள், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு மேற்கண்ட நாட்களுக்கு 6110 சிறப்பு பேருந்துகள் என்று, மொத்தம் 20,378 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களிள் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக 21 முதல் 23 ஆம் தேதி வரை தினசரி இயக்கப்படும் 2092 பேருந்துகளுடன், 4253 சிறப்பு பேருந்துகள், ஏனைய பிற முக்கிய ஊர்களிள் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 4600 என, மொத்தம் 15,129 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
எந்த ஊர் பேருந்துகளுக்கு எங்கே ஏற வேண்டும்?
1A.கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்.
1B.கிளாம்பாக்கம் மாநகரப் பேருந்து நிலையம்: வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்.
2.கோயம்பேடு பேருந்து நிலையம்: புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை (ECR), காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக பேருந்துகள் செல்லும்.
3.மாதவரம் புதிய பேருந்து நிலையம்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி. சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.
பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம். மேலும், முன்பதிவு செய்யாத பயணிகளும் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து பழைய மாமல்லபுரம் சாலை (OMR), கேளம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை, கேளம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?
வரும் 16 முதல் 19 ஆம் தேதி வரை காலை 7 முதல் இரவு 9 மணி வரையில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் 10 முன்பதிவு மையங்கள் இயங்கும். அதே போல கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்களும் செயல்படும். முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணைய தளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை (24x7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால், 1800 425 6151 என்ற இலவச எண்ணையோ அல்லது 044 24749002, 044 26280445, 044 26281611 ஆகிய எண்களையோ தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.
நகர்ப் பகுதியில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் வகையில் கூடுதல் மாநகரப் பேருந்துகளும் இயக்கப்படும். புறநகர் ரயில் சேவையை அதிகரிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் பேருந்துகளில் பட்டாசுகளை எடுத்துச் செல்லக்கூடாது.இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.