

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் சமீபத்திய பேச்சு, தமிழக அரசியலில் 'உறவுமுறை' சார்ந்த அரசியலை மீண்டும் ஒரு விவாதப் பொருளாக மாற்றியுள்ளது.
என்னை அம்மா என்று அழைக்க வேண்டாம்; அக்கா என்று அழைத்தால் போதும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கரம்பயத்தில் பாஜக கட்சியின் சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ‘தமிழக அரசு பாஸ் மார்க் வாங்கி இருக்கிறது என்றால், அது டாஸ்மாக்கில் மட்டும்தான், வேறு எதிலும் பாஸ் மார்க் வாங்கவில்லை என்றார்.
மேலும் அங்கு கூடியிருந்த தொண்டர்களை பார்த்து ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது இனிமேல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வரும் போது ‘அம்மா வந்துட்டாங்க, அம்மா வந்துட்டாங்க’ என்று என்னை குறிப்பிட்டார்கள்.
என்னை அம்மா என அழைக்க வேண்டாம். தமிழ்நாட்டுக்கு ஒரே அம்மாதான் இருக்க முடியும், அது மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான். என்னை அக்கா என்று அழைத்தால் போதும். வயசுக்காக சொல்லவில்லை. ஏற்கனவே ஒரு அம்மா இருக்கிறார். தமிழ்நாட்டிற்கு ஒரே அம்மா ஜெயலலிதா அம்மாதான்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் மக்கள் வயிறு நிறைய கூடிய கூட்டணி. வாழை இலை போடுவதுபோல, இரட்டை இலை போட்டு, குக்கரில் நீங்கள் செய்யும் சாதத்தை சமைத்து, மாம்பழத்தோடு பரிமாறுவதற்கு சைக்கிளில் எடுத்துச் சென்று, மக்கள் மனது தாமரைபோல மலரும்போது, இரட்டை இலையில் பரிமாறி உங்களை மகிழ்விக்க வருகிறோம்’ என்றார்.
அதாவது, தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் உறவு முறை வைத்து பாசத்தோடு அழைக்கின்றனர். அந்த வகையில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தனது தொண்டர்களைப் பார்த்து ரத்தத்தின் ரத்தங்களே என்று அழைத்தது மிகப்பெரிய வெற்றிக்கு வழிவகுத்தது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அனைத்து தொண்டர்களும் அம்மா என்றுதான் அழைக்கின்றனர். பாஜக தற்போது இதே பாணியைக் கையில் எடுப்பது, அந்த கட்சி தன்னை ஒரு 'தமிழகக் கட்சியாக' மக்களின் மனதில் பதிய வைக்க எடுக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
தேர்தல் நெறுங்குவதால் மக்களை கவரும் எண்ணத்தில் இதே டெக்னிக்கை பயன்படுத்த பாஜக தமிழக தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, திராவிடக் கட்சிகள் அக்கா, அண்ணா, அம்மா, அய்யா, தம்பி போன்ற வார்த்தைகளைத்தான் அதிகம் பயன்படுத்துவார்கள். அந்த பாசம்தான் வாக்குகளாக மாறுகிறது என்பதை உணர்ந்த பாஜக தலைவர்களும் திராவிட கட்சிகளின் டெக்னிக்கை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
அதேசமயம், சமீபத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சாத்தூரில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது தொண்டர்கள் மற்றும் மக்களிடம் தன்னை இனி "அண்ணி" என்று அழைக்காமல், "அம்மா" என்று அழைக்க வேண்டும் என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
பிரேமலதா விஜயகாந்த் தன்னை ‘அம்மா’ என்று அழைக்குமாறு கோரிய நிலையில், தமிழிசை ‘ஒரே ஒரு அம்மாதான் இருக்க முடியும்’ என்று கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நேரடியாக பிரேமலதாவிற்கு பதிலடி கொடுப்பது போல அமைந்தாலும், மறைமுகமாக ஜெயலலிதாவின் இடத்தை வேறு யாரும் நிரப்ப முடியாது என்ற கருத்தையும் வலுப்படுத்துகிறது.
தேர்தல் நெருங்கும் வேளையில், கொள்கைகளை விட இதுபோன்ற 'பாசப் போராட்டங்கள்' தமிழக மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அரசியல் கட்சிகள் நன்கு உணர்ந்துள்ளன.
எது எப்படியே தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.