

அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வர உள்ளதால், பொங்கல் தொகுப்புடன் பரிசுத்தொகை எவ்வளவு வழங்கப்படும் என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால் பொங்கல் பண்டிகைக்கு இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச அளவில் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் அதிமுக ஆட்சியில் ரூ.2,500 கொடுத்ததே பொங்கல் பரிசுத்தொகையில் அதிகபட்சமாக இருந்தது.
இந்நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு ரூ.3,000 வரை பரிசுத்தொகை வழங்கப்படும் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மேலும் ஜனவரி மாதம் மகளிர் உரிமைத் தொகை தொகையும் வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் தமிழக மக்களுக்கு மகளிர் உரிமைத்தொகை பிளஸ் பொங்கல் பரிசு தொகை என டபுள் ஜாக்பாட் கிடைக்க உள்ளது.
கடந்த 2023 செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை மாதந்தோறும் 15ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் இரண்டாவது கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் 1 கோடியே 30 லட்சம் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை வரவிருப்பதால், ஜனவரி மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த பொங்கல் பண்டிகையின் போது, மகளிர் உரிமைத் தொகை ஜனவரி 11-ம் தேதி வழங்கப்பட்டது. அதேபோல் தற்போது ஜனவரி 9-ம் தேதி வெள்ளிக்கிழமை அல்லது ஜனவரி 12-ம் தேதி திங்கட்கிழமை மகளிர் உரிமைத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க தமிழக ஏற்பாடு செய்து வருகிறது.
ஜனவரி இரண்டாம் வாரத்தில் இருந்து பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட இருக்கிறது. பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.3,000 வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் இது குறித்து அதிகாரவூர் தகவல்கள் இன்னும் வெளியாகாதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வார இறுதியில் பொங்கல் பரிசுத் தொகை குறித்த விவரங்கள் வெளியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 15-ம் தேதி தமிழ்நாடு முழுக்க பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எப்படியும் குறைந்தபட்சம் பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.3,000 கிடைத்து விடும் என்ற நிலையில், இதனுடன் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 கிடைக்கும் என்பதால், தமிழக இல்லத்தரசிகளுக்கு இந்த மாதம் மொத்தமாக ரூ.4,000 கிடைக்க உள்ளது.
இந்நிலையில் 1 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் தகுதியான 55,000 பேருக்கு வெகு விரைவில் ரேஷன் கார்டு வழங்கப்படும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஏற்கனவே ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31-ம் தேதிக்குள், e-KYC முடிக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. e-KYC முடிக்கவில்லை எனில் ரேஷன் கடையில் பொருட்களை வாங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், பொதுமக்கள் இதனை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.