

பான் கார்டு (Permanent Account Number)என்பது இந்திய குடிமக்களுக்கு வருமான வரித்துறையால் வழங்கப்படும் 10 இலக்க தனித்துவமான அடையாள எண் ஆகும். இது வரி செலுத்துதல், வங்கி கணக்கு தொடங்குதல், பெரிய நிதி பரிவர்த்தனைகள் செய்யும் போது அதாவது சொத்துக்கள் வாங்கும் போது அடையாளச் சான்றாகப் பயன்படுகிறது.
அந்த வகையில் பான் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு செய்தியை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, புதிய வருமான வரி சட்ட வரைவு 2025 மூலம் பான் கார்டு தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த நடைமுறை 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளது. இதன்படி, பண வைப்பு, சொத்து மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கும் விற்பனை செய்வதிலும் நடக்கும் மோசடிகளைத் தடுக்க பான் எண் சமர்ப்பிப்பது கட்டாயம் என இருந்தது.
அந்த விதிகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பான் எண் சமர்ப்பிப்பதற்கான வரம்புகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் வரும் ஏப்ரல் மாதம் 1-ம்தேதி முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் புதிய வருமான வரி சட்டத்தின்படி நீங்கள் செய்யும் ஒவ்வொரு செலவிலும் வருமான வரித்துறையில் கண்காணிக்க போகிறது.
* இனிமேல் நீங்கள் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒரே நாளில் 50 ஆயிரத்திற்கு மேல் வங்கி, கூட்டுறவு வங்கி அல்லது தபால் அலுவலகங்களில் ரொக்கமாக பணத்தை டெபாசிட் செய்தால் பான்கார்டு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று இருந்தது. அதுமட்டுமின்றி ஒரு நிதியாண்டில் வங்கி கணக்கில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்க பரிமாற்றம் நடந்தால் உங்கள் பான்கார்டு மூலம் நேரடியாக வருமான வரித்துறையின் கண்காணிப்பிற்கு செல்லும்.
* சொத்து வாங்குபவர்களுக்கும் இதில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10 லட்சம் ரூபாய்க்கு மேல் அசையா சொத்து விற்பனை/ வாங்கினால் பான் கார்டு அவசியம் என்ற நிலை இருந்தது. ஆனால் அந்த வரம்பு தற்போது 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
* அதேபோல் கார் வாங்குபவர்களுக்கும் புதிய கட்டுப்பாடு வந்துள்ளது. இதுவரை எந்த விலையில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வாங்கினாலும் பான் கார்டு கேட்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் 5 லட்ச ரூபாய்க்கு மேல் இருசக்கர வாகனம் அல்லது கார் வாங்கினால் மட்டுமே பான் கார்டு அவசியம் என்ற புதிய விதியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
* தற்போது, ஹோட்டல் மற்றும் ஆடம்பர உணவகங்களில் ரூ.50,000க்கும் அதிகமான உணவு பில்களுக்கு பான் எண் கட்டாயம். ஆனால் இனிமேல் நீங்கள் ஒரு ஆடம்பர ஹோட்டலுக்கு சென்று ரூ.1 லட்சத்திற்கு மேல் பில் கட்டினால் அங்கே உங்களது பான் கார்டை கொடுக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் உங்களது ஆடம்பர செலவுகளையும் அரசு கண்காணிக்கும் என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள்.
* தற்போது காப்பீட்டு பிரீமியம் ரூ.50,000ஐ தாண்டினால் பான் கார்டு தேவை என்ற விதி உள்ளது. இந்த வரம்பும் கூட அதிகரிக்கப்பட உள்ளது. இது காப்பீட்டுத் துறையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும்.
உங்களுடைய வங்கிக்கணக்குகள் ஏற்கனவே பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு பரிமாற்றமும் annual information statement எனப்படும் AIS அறிக்கையில் பிரதிபலிக்கும். வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டறியவே இந்த கடுமையான விதிகளை கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
2027-ம் ஆண்டு முதல் வருமான வரி தாக்கல் என்பது ஒரு கிளிக்கில் செய்யும் அளவிற்கு மிகவும் எளிமையாக்கப்படும் அதேவேளையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க இந்த பான் கார்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கிரிப்டோ கரண்சி வாங்குவோர் முதல் ஹோட்டலில் சாப்பிடுபவர்கள் வரை இனி யாரும் வருமான வரித்துறையின் பார்வையில் இருந்து தப்பமுடியாது என்பது தான் நிதர்சனம்.
இப்போது வரைவு விதிகளாகவே இவை வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பிப்ரவரி 22ம் தேதி வரை தெரிவிக்கலாம். கருத்துக்களைப் பெற்ற பிறகு, திருத்தப்பட்ட விதிகள் பின்னர் அறிவிக்கப்படும். அவை ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும்.
மத்திய அரசு அறிவித்துள்ள இந்த புதிய மாற்றங்கள் சாதாரண மக்களை பாதிக்குமா அல்லது வரிஏய்பை தடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.