

எதிரே வாகனம் வரும்போது டிரைவர் பிரேக் பிடிக்காவிட்டால் கார் தானாக நிற்கும் புதிய தொழில்நுட்பத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது வாகனம் தானாகவே பிரேக் அடிக்கும் 'Advanced Emergency Braking System' (AEBS) போன்ற நவீன தொழில்நுட்பங்களை கார்கள் மற்றும் வணிக வாகனங்களில் எளிதாகப் பயன்படுத்த, மத்திய அரசு வாகனங்களுக்கான ரேடார் அலைக்கற்றை (Radar Spectrum) பயன்பாட்டு உரிமைகளைத் தளர்த்தியுள்ளது.
உலகில் அதிக கார்கள் விற்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் நம் நாட்டில் சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1 லட்சத்து 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
டிரைவர்களின் கவனக்குறைவு மற்றும் மனித தகறுகளாலேயே பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன. இதனை தடுத்து எதிரே வரும் வாகனத்தின் மீது கார் மோத போனால் டிரைவர் ‘பிரேக்’ போடாவிட்டாலும் காரே தானாக ‘பிரேக்’ பிடித்து விபத்தை தவிர்க்கும் அதிநவீன தொழில்நுட்பங்களை இந்தியாவில் தாராளமாக அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த நடவடிக்கை, தொழில்துறை முழுவதும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை ஏற்றுக்கொள்வதை நெறிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கார்கள் மோதிக் கொள்வதை தடுக்கும் சென்சார் கருவிகளுக்கும், தானாக ஓடும் கார்களுக்கும் குறிப்பிட்ட ‘ரேடியோ அலைவரிசைகள்’ (சிக்னல்கள்) பயன்படுத்தப்படுகின்றன. இதுவரை இந்த சிக்னல்களை பயன்படுத்த மத்திய அரசிடம் இருந்து தனியாக பணம் கட்டி ‘லைசென்ஸ்’ பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் இந்த வசதி கொண்ட கார்களை இந்தியாவில் தயாரிப்பதில் சிக்கல் நீடித்தது.
தற்போது மத்திய அரசு வெளியிட்டுளள புதிய அறிவிப்பின்படி கார்களில் ‘சென்சார்’களுக்கு பயன்படும் குறிப்பிட்ட அலைவரிசைகளுக்கு இனி தனியாக லைசென்ஸ் பெற தேவையில்லை. கார்களில் பயன்படுத்தப்படும் 77GHz - 81GHz அதிர்வெண் கொண்ட ரேடார் சென்சார்களுக்கு இருந்த உரிமத் தேவையை (licence requirement) மத்திய அரசு நீக்கியுள்ளது. இது சர்வதேச தொழில்நுட்பங்களை இந்தியாவில் உள்ள கார்களிலும் தடையின்றிப் பயன்படுத்த உதவும்.
இது ADAS தொழில்நுட்பத்தை விரைவாகப் பயன்படுத்த வழிவகுப்பதோடு, பாதுகாப்பான மற்றும் இணைக்கப்பட்ட வாகனங்களுக்கும் வழிவகுக்கிறது.
அதாவது தகவமைப்புக் பயணக் கட்டுப்பாடு (adaptive cruise control), தானியங்கி அவசரகால பிரேக்கிங் (autonomous emergency braking), மற்றும் மறைவான இடங்களைக் கண்டறிதல் (blind-spot detection) உள்ளிட்ட, மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகளுக்கு (ADAS) அடிப்படையாக விளங்கும் ரேடார் சார்ந்த செயல்பாடுகளுக்கு இந்த அலைவரிசை மிகவும் இன்றியமையாதது. மேலும், இந்தத் தொழில்நுட்பங்கள் எதிர்காலத் தானியங்கி வாகனங்களுக்கான அத்தியாவசியமான அடிப்படைக் கூறுகளாகவும் விளங்குகின்றன.
இந்தியாவில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் குறைக்கும் வகையில், உலகளாவிய பாதுகாப்புத் தரங்களுக்கு இணையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பெரிய பயணிகள் வாகனங்கள் மற்றும் லாரிகளுக்கு பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஓட்டுநர் பிரேக் பிடிக்க தவறினாலும் அல்லது அவசர காலங்களில் கவனக்குறைவாக இருந்தாலும், ரேடார்கள் மற்றும் கேமராக்கள் மூலம் எதிரே வரும் வாகனம் அல்லது தடையை உணர்ந்து கார் தானாகவே நின்றுவிடும்.
கார் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த சிக்னல்களை நேரடியாகவும், இலவசமாகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவு காரணமாக அமெரிக்கா, லண்டன் போன்ற வெளிநாடுகளில் விற்கப்படும் அதே அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார்களை இந்தியாவிலும் எளிதாக விற்பனைக்கு கொண்டுவர முடியும்.
ஏற்கனவே வெளிநாடுகளில் ‘டிரைவர் இல்லா’ கார்களை இயக்கி வரும் கார் நிறுவனங்கள், அதே தொழில்நுட்பங்களை இந்தியாவிலும் எந்த தடையும் இன்றி உடனடியாக அறிமுகப்படுத்த முடியும்.
மத்திய அரசின் இந்த புதிய விதியால் குறைந்த விலை கார்களில் கூட விபத்தை தடுக்கும் ‘ஆட்டோமேட்டிக்’ பாதுகாப்பு வசதிகளை புகுத்த முடியும். மேலும் இந்தியாவில் எதிர்காலத்தில் ‘டிரைவர் இல்லா கார்கள்’ மற்றும் விபத்தே நடக்காத தானியங்கி பாதுகாப்பு வசதிகள் சாதாரண மக்கள் பயன்பாட்டுக்கும் வருவதற்கான மிக முக்கிய தொடக்கமாக மத்திய அரசின் இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 2024-ம் ஆண்டில் 1,77,000-க்கும் மேற்பட்ட சாலை விபத்து மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், 'அறிவுசார் வாகனத் தொழில்நுட்பங்களை' (intelligent vehicle technologies) பரவலாகப் பயன்படுத்துவதன் மூலம் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது.
புதிய விதிமுறைகள் இத்தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்கவில்லை என்றாலும், அவை முக்கிய ஒழுங்குமுறைத் தடையை நீக்கி, இந்தியாவில் பாதுகாப்பான மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட போக்குவரத்து முறைக்கு வழிவகுக்கின்றன.