உலகின் பாரம்பரியமிக்க அழகான நாடுகளில் கிரீஸ் நாடும் ஒன்று. கிரீஸ் நாட்டில் ஏஜியஸ் கடல் பகுதியில் சாண்டோரினி என்ற அழகான தீவு உள்ளது. இங்கு சுமார் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் நிரந்தரமாக வசிக்கின்றனர். அழகான வெள்ளை நிற சுண்ணாம்பு பாறைகள், கலாச்சார சின்னமாக விளங்கும் வெள்ளை நிறத்தில் பளபளக்கும் வீடுகள் மற்றும் அழகிய நீல நிற குவிமாட தேவாலயங்கள் ஆகியவற்றைக் கொண்ட சாண்டோரினி தீவு ஒரு அற்புதமான சுற்றுலா தலமாகும். பல பாலிவுட் திரைப்படங்களின் பாடல் காட்சிகளுக்காக இங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
புகைப்படம் எடுக்க சிறந்த இடம் என்பதால் இது இன்ஸ்டகிராம் தீவு என்று சுற்றுலாவாசிகளால் அழைக்கப்படுகிறது. இங்கு புகைப்படம் எடுப்பதற்காகவே ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். 2024 ஆம் ஆண்டில் மட்டும், சுமார் 28.8 லட்சம் சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் சாண்டோரினிக்கு வந்துள்ளனர். இந்த எண்ணிக்கையில் கப்பல் பயணிகள் சேர்க்கப்பட வில்லை. ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டு 34 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்த தீவுக்கு வந்து சென்றுள்ளனர்
கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி, சாண்டோரினி தீவு, அதற்கு அருகில் உள்ள அயாஸ் மற்றும் அமர்கோஸ் தீவுகளில் நில அதிர்வு உணரப்பட்டது. கடந்த சில நாட்களில் 200க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் அழகிய கிரேக்க நகரமான சாண்டோரினியை உலுக்கியுள்ளன. இந்த நிலநடுக்கங்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகளுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் வாசிகளும் தொடர்ச்சியாக தீவை விட்டு வெளியேறி வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை முதல் திங்கள் கிழமை பிற்பகல் வரை, சாண்டோரினிக்கும் அருகிலுள்ள அமோர்கோஸ் தீவுக்கும் இடையில் ரிக்டர் அளவில் 3 முதல் 4.9 வரையிலான சுமார் 200 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. ஆயினும் அரசு மீட்புப் பணியாளர்கள், ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய் ஆகியவற்றுடன் அவசர கால உதவிக்கு தயாராக உள்ளனர். மேலும் டிரோன்கள் மூலம் மக்கள் வசிப்பிடத்தை கண்காணித்து வருகின்றனர்.
சாண்டோரினி மற்றும் அருகிலுள்ள தீவுகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளன. ஜனவரி 24 ஆம் தேதி நிலநடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு தொடங்கிய போதிலும், சமீபத்திய நாட்களில் அது தீவிரமடைந்துள்ளது. கிரேக்க தீவுகளின் மோசமான விஷயம் என்னவென்றால், கால்டெராவின் எரிமலையின் அருகே பல கிராமங்கள் ஆபத்தான நிலையில் அமைந்துள்ளன. எரிமலை வெடிப்பு ஏதேனும் நிகழுமா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
தொடர்ந்து நிலநடுக்கத்தினால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து நிபுணர்கள் இப்போது கவலை கொண்டுள்ளனர். இந்த சிறிய நிலநடுக்கங்கள் ஏதேனும் பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுவதன் முன்னெச்சரிக்கையாக இருக்குமோ என்று விவாதித்து கொண்டுள்ளனர்.
இது பற்றி நாட்டு மக்களுக்கு கிரீஸ் பிரதமர் கைரியாகோஸ் மிட்சோடாகிஸ் ஆறுதல் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியான நிலநடுக்கத்தில் பலரும் வெளியேறியதால் அமைதியை கடைப்பிடிக்குகுமாறு வலியுறுத்தினார். அரசு உதவி எப்போதும் தயார்நிலையில் இருப்பதாகவும் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.