

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத்தின் பதவி காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் இந்த மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான அட்டவணையை தயாரிக்கும் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்த பணி முடிவடையும் கட்டத்தில் இருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழுவினர், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து டெல்லி திரும்பி உள்ளனர்.
டெல்லியில் இன்று 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை ஞானேஷ்குமார் தலைமையில் நடைபெறுகிறது. இதனால் இன்னும் 3 முதல் 5 தினங்களுக்குள் தேர்தல் நடைபெறும் தேதிகள், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு , புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் ஆணையம் ஒரே கட்டமாக வாக்குபதிவை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதே நேரம் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக மேற்கு வங்கத்தில் 3 முதல் 4 கட்டங்களாக வாக்கு பதிவுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இதேபோல் அசாம் மாநிலத்தில் 2 கட்டமாக வாக்கு பதிவுகளை நடத்தி, தேர்தலை முடிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய சட்டமன்றங்களின் பதவி காலம் மே மாதத்தில் இருந்து முடிவடைய தொடங்குகிறது. இதனால் தேர்தல் ஆணையம் விரைவில் தேர்தலை நடத்த ஆயத்தமாகி வருகிறது. இதில் முதலாவதாக மேற்கு வங்க மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 7, 2026 அன்றுடன் முடிவடைகிறது. அடுத்ததாக தமிழ் நாடு சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 10, 2026 அன்றுடன் முடிவடைகிறது. அசாம் மாநிலம் மே 20 , 2026 , கேரளா: மே 23, 2026 மற்றும் புதுச்சேரி துணைநிலை மாநிலம் ஜூன் 15, 2026 அன்றுடன் அவர்களின் சட்டமன்ற பதவி காலங்கள் முடிவடைகின்றன.
தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்ட சில தினங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். அனைத்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை மே முதல் வாரத்தில் நடைபெற அதிக வாய்ப்பு இருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. ஏற்கனவே இந்த மாநிலங்களில் வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியாகிவிட்டன. 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் முறை இந்தத் தேர்தலிலும் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் மிகவும் வெளிப்படையாகவும், பாதுகாப்புத் தன்மை மிகுந்ததாகவும், நடைபெற தேர்தல் ஆணையம் பல புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்துள்ளது. இதன்படி மேற்குவங்கம், அசாம் , தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் 100% நேரடி இணைய ஒளிபரப்பு (Webcasting) செய்யத் தேர்தல் ஆணையம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறையில் வாக்குப்பதிவு நடைபெறும் சாவடிகளை தேர்தல் அதிகாரிகள் டெல்லியில் இருந்து நேரடியாக கண்காணிக்க முடியும்.
தமிழகம் உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அரசியல் களம் ஏற்கனவே சூடு பிடித்து விட்டது. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுகள் இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் வாக்காளர்களுக்கு ஏராளமான சலுகைகளை தொடர்ச்சியாக அறிவித்துக் கொண்டு வருகின்றனர்.