

இபிஎஸ் தலைமையில் சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 47 தொகுதிகளில் வென்று அதிமுக 3வது இடம் பெற்றுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நாளை(மே 6) நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நிலவரம், கட்சியின் செயல்பாடு, அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் மற்றும் சட்டமன்றக் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து நாளை நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 4) நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் 108 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக கூட்டணி 73 இடங்களைப் பெற்றது. அதிமுக கூட்டணி 53 இடங்களைப் பெற்றது. திமுக தனித்து 60 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. அதிமுக தனித்து 47 இடங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த கால தேர்தல்களில் ஆட்சி அல்லது இரண்டாம் இடத்தை பிடித்து வந்த அதிமுக இம்முறை மூன்றாம் இடத்திற்கு வந்துவிட்டது. திமுக, தவெக மற்றும் அதிமுக என மும்முனைப் போட்டி நிலவியதால் வாக்குகள் பிரிப்பு ஏற்பட்டு அதிமுகவை பாதித்துள்ளது.
ஆனால் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளை(மே 6) அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் உடனடியாக சென்னைக்கு வரும்படி அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். தொங்கு சட்டசபை சூழல் நிலவுவதால் எம்எல்ஏக்களை ஒருங்கிணைக்க இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
முக்கிய எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழந்து மூன்றாவது இடத்திற்கு அதிமுக சரிந்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் வருகை அதிமுகவின் வாக்கு வங்கிகளான இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நாளை நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படலாம் என்றும், அத்துடன் இது குதிரை பேரத்தை தடுக்கும் வகையில் எம்எல்ஏக்களை ஓரிடத்தில் திரட்டுவதற்காக நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.