

தமிழகம் உட்பட 4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். வருகின்ற மே 10 ஆம் தேதியுடன் தற்போதைய அரசின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனையொட்டி தமிழ்நாடே எதிர்பார்த்த தேர்தல் தேதியை அறிவித்தார் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்.
இதன்படி வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 75,032 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 2.89 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 20 முதல் 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1.05 கோடி ஆகும்.
தலைமை தேர்தல் ஆணையர் கூறுகையில், “தமிழ்நாட்டில் 234, கேரளாவில் 140, மேற்குவங்கத்தில் 294, அசாமில் 126 மற்றும் புதுச்சேரியில் 30 தொகுதிகள் என மொத்தம் 824 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. 5 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. 5 மாநிலங்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
எஸ்ஐஆர் பணிகளின் போது அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டனர். தகுதியான ஒரு வாக்காளர் கூட விடுபட்ட கூடாது என்பதில் தேர்தல் பணியாளர்கள் முழு கவனத்துடன் பணியாற்றியுள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் சக்கர நாற்காலிகளுக்கான ரேம்ப் வசதி அமைக்கப்படும். வாக்குச் சாவடிகளில் செல்போன்களுக்கு அனுமதி இல்லை என்பதால் அதற்கு தனியாக கவுண்டர்கள் அமைக்கப்படும். வாக்குச்சாவடிகளில் 100% சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். மேலும் வாக்குச்சாவடிகளின் செயல்பாடுகள் இணையத்தில் நேரலையில் கண்காணிக்கப்படும்.
தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
முக்கிய அம்சங்கள்:
* தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், புதிய திட்டங்கள், சலுகைகள் அல்லது நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புகளை அரசால் வெளியிட முடியாது.
* அமைச்சர்கள் அல்லது அரசியல் கட்சியினர் அரசு வாகனங்கள் மற்றும் கட்டிடங்களை தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது.
* பேரணிகள் மற்றும் கூட்டங்கள் நடத்த அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் முன் அனுமதி பெறுவது அவசியம்.
* அரசு செலவில் அரசியல் ஆதாயம் தரும் வகையிலான விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் அனைத்தும் தடை செய்யப்படும்.
* பணப் பரிமாற்றம், மது மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்க தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படைகள் தீவிர சோதனையில் ஈடுபடுவர்.
* ரூ.50,000 மேல் யாரேனும் ரொக்கமாக எடுத்துச் சென்றால் அதற்கு முறையான ஆவணங்கள் இருக்க வேண்டும். இல்லையெனில் பணம் பறிமுதல் செய்யப்படும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அல்லது திருத்தங்கள் செய்ய விரும்புவோர், வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.
5 மாநிலங்களின் தேர்தல் தேதி:
தமிழ்நாடு: ஏப்ரல் 23
புதுச்சேரி: ஏப்ரல் 09
கேரளம்: ஏப்ரல் 09
அசாம்: ஏப்ரல் 09
மேற்கு வங்கம்: முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29
5 மாநில தேர்தல் முடிவுகளும் மே 4 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மார்ச் 30 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 6 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள்: ஏப்ரல் 9.