

மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் போரால், உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக மத்திய அரசு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி சமையல் எரிவாயு விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டால், மாற்று ஏற்பாடாக ரேஷன் கடைகளில் கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் கூடுதலாக 48,000 லிட்டர் மண்ணெண்ணையை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் தேவையை ஓரளவு குறைக்க முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசு சார்பில் மாதந்தோறும் 1 லட்சம் லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இம்மாதம் கூடுதலாக 48,000 லிட்டர் சேர்த்து, மொத்தம் 1,48,000 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட இருக்கிறது.
இது தவிர மண்ணெண்ணெய், நிலக்கரி மற்றும் பயோ கேஸ் போன்ற மாற்று எரிபொருள்களை ஹோட்டல்கள் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு தற்போது தற்காலிக அனுமதியை வழங்கியுள்ளது.
மத்திய அரசு ஒதுக்கியுள்ள கூடுதல் மண்ணெண்ணெய், ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும். குறிப்பாக ஊரகப் பகுதிகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கள்ளச் சந்தையில் மண்ணெண்ணெய் விற்கப்படுவதை தடுக்கவும், தகுதியான நபர்களுக்கு மண்ணெண்ணெய் சென்றடைவதை உறுதி செய்யவும் மாநில அரசுகள் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போதுமான இருப்பு உள்ளதால், பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
அவசர கால சூழலில் ரேஷன் கடைகளின் மூலம் மண்ணெண்ணெய் வழங்க எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன
பொதுவாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு, அவர்கள் வசிக்கும் பகுதி மற்றும் பயன்படுத்தும் சமையல் எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும்.
* சிலிண்டர் இணைப்பு இல்லாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, மண்ணெண்ணெய் அதிகபட்ச அளவில் வழங்கப்படும்.
* ஒரே ஒரு சிலிண்டர் இணைப்பை வைத்திருப்பவர்ளுக்கு, குறைந்த அளவில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும்.
* இரண்டு சிலிண்டர்களை வைத்திருந்தால் மண்ணெண்ணெய் வழங்கப்படாது.
இந்நிலையில் தற்போது எழுந்துள்ள கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்களுக்கு கூடுதலாக மண்ணெண்ணையை விநியோகிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதால், அனைவருக்குமே குறைந்தபட்ச அளவில் மண்ணெண்ணெய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மலைப்பகுதிகள் மற்றும் கடற்கரை பகுதியில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.