

தமிழத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 23 வெளியிடப்பட்டுவிட்டது. அதில் 5.67 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் வாக்காளர் பட்டியலில் மேலும் பெயர்களை சேர்க்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியும். அதன்படி தேர்தலில் வாக்களிப்பதற்கு பெயர் சேர்க்கப்படாத தகுதியுள்ள வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க கூடுதல் வாய்ப்பை தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது.
தேர்தல் கமிஷனின் உத்தரவின்படி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் ஏப்ரல் 6ஆம் தேதி. அதற்கு பத்து நாட்கள் முன்பு வரை ஆன்லைன் மூலமோ அல்லது நேரடியாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு தகுதியுள்ள ஒருவர் படிவம் 6 மூலமாக உரிய ஆவணங்களுடன் தங்கள் பெயரை சேர்க்கலாம். படிவம் 8 மூலமாக வாக்குச்சாவடி மாற்றத்திற்கு, தொகுதி மாற்றத்திற்கு கூட விண்ணப்பிக்கலாம். இந்த படிவங்களை வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்கள் முன்பு வரை சமர்ப்பிக்கலாம். அதேபோல் திருமணம் ஆனவர்களும் எளிதாக ஆன்லைன் அல்லது தேர்தல் ஆணைய செயலியின் மூலம் தங்களுடைய தொகுதி மாற்றத்திற்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
புதிதாக சேர்க்கப்படும் வாக்காளர்களுக்காக தேர்தல் கமிஷன் துணைப் பட்டியலை வெளியிடும். அப்படி துணைப் பட்டியலில் இடம் பெற்றவர்களும் வருகின்ற தேர்தலில் வாக்களிக்க முடியும். அத்துடன் மார்ச் 27ஆம் தேதிக்குப் பிறகும் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பை இவர்கள் தவற விடுவார்கள். காரணம் தேர்தல் முடிந்த பிறகு தான் அவர்களுடைய விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்றால் உடனடியாக மார்ச் 27ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.
எனவே வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்காத தகுதியுள்ள வாக்காளர்கள் உடனடியாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!