

இந்திய தேர்தல் ஆணையம், வேட்புமனுத் தாக்கல் செய்வதை எளிதாக்க சுவிதா(Suvidha) (https://suvidha.eci.gov.in/) என்ற ஆன்லைன் போர்டல் மற்றும் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் வேட்பாளர்கள் தங்கள் இல்லத்திலிருந்தே மனுக்களை நிரப்பலாம், அஃபிடவிட்(affidavit) பதிவேற்றலாம் மற்றும் பாதுகாப்பு வைப்புத் தொகையை(security deposit) ஆன்லைனில் செலுத்தலாம்.
சுவிதா 2.0 செயலி மூலம் வேட்பாளர்கள் ஆன்லைனில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் புதிய நடைமுறையில் வேட்பாளர்கள் மொபைல் எண், வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி அடிப்படைத் தகவல்களை தானாகவே பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது வேட்பாளர்கள் மொபைல் எண் மற்றும் OTP மூலம் உள்நுழைந்து தங்கள் விவரங்களை நிரப்பி, சரிபார்ப்புக்காக குறிப்பிட்ட நேரத்தை முன்பதிவு செய்யலாம். ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட மனுவின் பிரிண்ட் அவுட்டில், க்யூஆர்(QR) குறியீடு இருக்கும். இது தேர்தல் அதிகாரியால் சரிபார்க்கப்படும்.
இந்த செயலி மூலம் வேட்புமனுவின் நிலை(status), வேட்புமனுத் தாக்கல் மற்றும் பிரச்சாரத்திற்கான அனுமதிகளைப் பெறவும், கண்காணிக்கவும் முடியும். இந்த ஆன்லைன் வசதி விருப்பத்தேர்வு மட்டுமே. வழக்கமான ஆஃப்லைன்(நேரடி) தாக்கல் முறையும் தொடர்ந்து அமலில் இருக்கும்.
தேர்தல் நடக்கும் அலுவலரிடம் நேரடியாகச் சென்று மனுத்தாக்கல் செய்யும்பொழுது ஏற்படும் சிரமங்களைப் போக்குவதற்கு சுவிதா 2.0 செயலி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. சொத்து விவரங்கள், வழக்குகள் குறித்த பிரமாண பத்திரங்களை இந்த செயலி வாயிலாகவே பதிவேற்றம் செய்து கொள்ளலாம். வேட்புமனுத் தாக்கலின் போது ஏற்படும் தேவையற்ற மோதல்கள், நெரிசல்களைத் தவிர்க்க ஆன்லைன் வேட்புமனுத் தாக்கல் பேருதவியாக இருக்கும் என்றும், ஆன்லைனில் மனுத்தாக்கல் செய்தாலும் அதன் நகலை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பாளர்கள் நேரில் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.