

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தை என்டிஏ கூட்டணியில் இணைக்க, பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் எந்தக் கட்சியுடனும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என தவெக தரப்பில் நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடப் போவதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி தவெக-வின் முக்கிய தலைவர்கள் சென்னையில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியிலும், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியிலும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தி.நகர் தொகுதியிலும், பொருளாளர் வெங்கட்ராமன் மயிலாப்பூர் தொகுதியிலும் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் பலரும் கணித்துள்ளனர். இருப்பினும் திமுக கூட்டணி வலுவாக இருக்கும் சூழலில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் தவெக இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நேற்று வரை கருதப்பட்டது.
ஆனால் இதற்கான எந்தவித பேச்சுவார்த்தையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அக்கட்சியின் செயலாளர் நிர்மல் குமார் நேற்று அறிவித்தார்.
இதன்படி சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதன்படி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட போவதாகவே கூறப்படுகிறது.
இக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியைச் சேர்ந்தவராக இருந்தாலும், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள தி. நகர் தொகுதியில் போட்டியிடப் போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
புதுச்சேரியைப் பொறுத்தவரை பாஜக கூட்டணியிலிருந்து, என்.ஆர்.காங்கிரஸ் வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது என்.ஆர்.காங்கிரஸ் தவெக-வுடன் கூட்டணி அமைத்து, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதன்மூலம் தமிழகம் மட்டும் இன்றி புதுச்சேரியிலும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட, தமிழக வெற்றிக் கழகம் முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கும் சூழலில், தனது பலத்தை நிரூபிக்க இம்முறை தனித்து நிற்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் தொகுதி வாரியாக தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு இன்னும் 13 நாட்கள் மீதம் இருக்கும் சூழலில் அதற்குள் கூட்டணி முடிவுகள் மாறுக்கூடும் என்றும் கருதப்படுகிறது. இந்நிலையில், ஜனநாயகன் பட சென்சார் வழக்கு மற்றும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு ஆகியவற்றில் விஜய் சிக்கியிருப்பதால், தேர்தல் தேதிக்குள் இந்த இரண்டு பிரச்சினைகளிலும் இருந்து விஜய் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.