

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணியை தேர்தல் ஆணையம் கடந்த 4-ந் தேதி அன்று தொடங்கியது. தற்போது வீடு, வீடாக சென்று படிவங்களை கொடுத்து, வாக்காளர்கள் விவரங்களை பூர்த்தி செய்யும் பணியை தேர்தல் அலுவலகர்கள் தொடங்கி உள்ளனர். இவர்கள் இந்த பணியை வருகிற டிசம்பர் 4-ந் தேதி வரை மேற்கொள்வார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கடந்த ஜனவரி 1-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஒரு மாதத்துக்குள் 6.34 கோடி வாக்காளர்கள் விவரங்களை எப்படி நேரில் சென்று சரி பார்க்க முடியும்? ஏற்கனவே ஒரு மாதம் காலம் என்பது மிகவும் குறைவு என்றும், அவசர அவசரமாக எப்படி செய்ய முடியும் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அவசர கதியில் பணியினை மேற்கொண்டால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றன.
அதேநேரம் இன்னும் பல பகுதிகளில் கணக்கீட்டு விண்ணப்ப படிவம் கொடுக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்தநிலையில் காலதாமதத்தை தவிர்ப்பதற்காக ‘ஆன்லைன்' மூலம் கணக்கீட்டு படிவத்தை நிரப்புவதற்கான வசதியை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.
வாக்காளர்கள் வசதிக்காக இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in- ல் கணக்கீட்டு படிவத்தை ‘ஆன்லைன்' மூலம் நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.
* வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்னை பயன்படுத்தி https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலம் உள்ளே நுழைய வேண்டும்.
* இதற்கு பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி எண்) அனுப்பப்படும்.
* அந்த எண்ணை உள்ளிட வேண்டும். அதன்பின்னர் அந்த இணைய பக்கத்தில் காட்டப்படும் ‘கணக்கீட்டு படிவம்' (Fill Enumeration Form) என்ற இணைப்பை தேர்வு செய்ய வேண்டும்.
* வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு, வாக்காளர் இணையப்பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
* சரியான விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு இணைய பக்கமானது ‘e-sign' பக்கத்திற்கு மாறும்.
* அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு மீண்டும் ஒருமுறை ஓடிபி எண் அனுப்பப்படும். அந்த எண்ணை பதிவு செய்த உடன், படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும்.
* வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியலை பூர்த்தி செய்ய இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.