ஊழியர்கள் இனி இபிஎஃப் தொகையை UPI மூலமாகவே எடுக்க முடியும். EPFO-வின் இந்தப் புதிய விதிமுறைகள் வரும் மே 1-ம்தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. இபிஎஃப் பணத்தை UPI மூலம் எடுப்பதற்கான புதிய விதிமுறைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வரும் மே 1-ம்தேதி முதல் EPFO-வில் (தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்) பெரிய மாற்றங்கள் வரவுள்ளன. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது அமைப்பை மிகவும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்ததாக மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இனிமேல் PF கணக்கு வைத்திருக்கும் லட்சக்கணக்கான சந்தாதாரர்கள் அவர்களது PF பணத்தை எடுக்க வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. PF தொகையை UPI மூலமாகவோ, ATM மூலமாகவோ சில நிமிடங்களில் உடனுக்குடன் பெற முடியும். அதாவது வரும் மே 1 முதல், சந்தாதாரர்கள் UPI வசதியைப் பயன்படுத்தி நேரடியாக தங்கள் வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றிக்கொள்ள முடியும்.
தற்போது PF பணம் எடுக்கும் செயல்முறை 7 முதல் 15 நாட்கள் ஆகும் நிலையில் ஊழியர்கள் அவசர பணத்தேவைக்காக கஷ்டப்படுவதை தவிர்ப்பதற்காக இந்த வசதியை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. மே 1-ம்தேதி முதல் வரும் புதிய நடைமுறையின் மூலம் PF நிதியை சில மணி நேரங்களுக்குள் பெறமுடியும்.
முக்கியமாக, EPFO 3.0 இன் கீழ், முன்பணக் கோரிக்கைகள் (Advance Claims) 3 நாட்களில் தானாகவே தீர்வு செய்யப்படும். 75% வரை நிதியை அவசரத் தேவைகளுக்குப் பெறலாம், மேலும் வேலையளிப்பவரின் ஒப்புதல் தேவைப்படாது.
மே 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள் (Expected from May 1, 2026):
PF சந்தாதாரர்கள் தங்களின் அவசர கால பிஎஃப் பணத்தை UPI மூலம் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு உடனுக்குடன் பெறலாம்.
பிஎஃப் பணத்தை எடுப்பதற்கான கிளைம்கள் (Claims) இனி சில வாரங்கள் காத்திருக்காமல், 3 நாட்களில் மிக வேகமாக செட்டில் செய்யப்படும்.
ATM மூலமாகவும் பிஎஃப் தொகையை எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
பெரும்பாலும், பிஎஃப் பணத்தை எடுக்கும்போது நிறுவனத்தின் (Employer) ஒப்புதல் தேவைப்படாது.
கிளைம் செய்யும்போது காசோலை (Cheque) அல்லது பாஸ்புக் நகல் பதிவேற்றம் செய்யத் தேவையில்லை.
அதிகப்படியான வரிப் பிடித்தங்களைத் தவிர்க்க, உங்கள் PAN எண்ணையும் அதனுடன் இணைப்பது நல்லது.
UMANG ஆப் அல்லது DigiLocker மூலம் PF சேவைகளை எளிதாகப் பெறலாம்.
- இந்த மாற்றங்கள் PF சந்தாதாரர்களின் பணத்தை உடனுக்குடன், எவ்வித சிரமமும் இன்றி பெற உதவும்.
ஆரம்பத்தில், தினசரி UPI மூலம் மருத்துவ அவசரத் தேவைகள் அல்லது கல்வி போன்ற சிறிய அட்வான்ஸ்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான தொகையை உடனடியாக எடுக்க முடியும். இதற்கு உங்கள் UAN நம்பர் ஆதார் மற்றும் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் UPI ஐடிக்காக அதே மொபைல் எண் உங்கள் வங்கி மற்றும் EPFO ஆகிய இரண்டிலும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
உங்களுடைய PF கணக்கிலிருந்து மோசடியாகப் பணம் எடுப்பதைத் தடுக்க, UPI பரிவர்த்தனைகள் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் OTP சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்கும்.
இந்த விதிமுறை வரும் மே 1-ம்தேதி முதல் அமலுக்கு வரும் அதேவேளையில் EPFO இந்த புதிய வசதியை விரைவில் தனது அதிகாரப்பூர்வ செயலியான உமாங் (Umang) மற்றும் இணையதளத்தில் சேர்க்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே பிற்காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்க, சந்தாதாரர்கள் தங்களின் KYC விவரங்களை இப்போதே புதுப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.