

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழக சட்டசபையில் தவெக அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான முதல் பட்ஜெட் இன்று (புதன் கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான முதல் பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்கிறார். தவெக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் நாளையும், வேளாண் பட்ஜெட் நாளை மறுநாளும் தாக்கல் செய்யப்படுகின்றன. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் (தவெக பட்ஜெட்) என்பதால் மக்களைக் கவரும், குறிப்பாகப் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு ரூ.2,500, விவசாயக் கடன் தள்ளுபடி, பால் கொள்முதல் அதிகரிப்பு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தவெக அரசு பொறுப்பேற்றவுடன் 200 யூனிட் இலவச மின்சார திட்டம் அமல்படுத்தப்பட்டது.
பின்னர், தவெக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற வாக்குறுதிகளான ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் 60 வயது வரை ரூ.2,500 என்ற மதிப்புமிகு மகளிர் திட்டம், ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர், வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை, அனைத்து அரசு பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட தேர்தல் அறிக்கை தொடர்பான எதிர்பார்ப்புகள் மக்களிடையே அதிகரிக்கவே, தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட்டது. அதில் மாநில அரசு கடன் சுமை ரூ. 13.18 லட்சம் கோடி என்பது உள்பட மோசமான நிதிநிலை தொடர்பான பல்வேறு விவரங்கள் வெளியிடப்பட்டன.
இதனிடையே 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவு திட்ட விரிவாக்கம், தாய் மாமன் தங்க மோதிர திட்டம் ஆகியவை விரைவில் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறுவதற்காக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம், இளைஞர்களுக்கான உதவி தொகை,
‘வெற்றித் தமிழகம்’ என்ற பெயரிலான அரசின் ஐந்தாண்டு தொலைநோக்கு திட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.7,000 கோடி வட்டியில்லா கடனுதவி, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர நடவடிக்கை, புதிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மாணவர்கள் உயர் கல்விக்கு பிணையின்றி ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன் உள்ளிட்ட திட்டங்கள் குறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
கடும் நிதிநெருக்கடியில் இருக்கும் தமிழக அரசு இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே இந்த பட்ஜெட்டை தயாரித்திருக்கும் என கருதப்படுகிறது.
2026-27-ம் பொது பட்ஜெட்டை தொடர்ந்து நாளை வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்கிறார்.
பாசன கட்டமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் தவெக அரசால் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் நலத்திட்டங்களுக்கு மட்டுமே ஆண்டுக்கு 25,000 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழக அரசின் நிதி நிலை இவ்வாறிருக்க, இத்தகைய சூழலில் புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு எவ்வாறு இருக்கும்? மேலும், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதேநேரம், காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனை, மேகதாது அணைப் பிரச்சனை, மின்வெட்டு, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியம் எனப் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பத் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன.
இதற்கிடையில், நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் கருத்துத் தெரிவித்ததாக, திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
எனவே, இன்று கூடவுள்ள சட்டப்பேரவையில் இச்சம்பவம் கண்டிப்பாக எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் இக்கூட்டத்தொடர் முழுவதும் ஆளுங்கட்சியினருக்கும் திமுகவினருக்கும் இடையே அனல் பறக்கும் காரசாரமான விவாதங்களுக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.