

நாடு முழுக்க பரபரப்பாக இருக்கும் அரசியல் சூழலில், தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. நீண்ட காலமாக தமிழ்நாட்டை திராவிட அரசுகள் ஆண்டு வந்த நிலையில், அவர்கள் பெரும்பாலும் அவர்கள் சித்தாந்தம் சார்ந்து பொருளாதார திட்ட ஒதுக்கீட்டு முறையினை செய்வார்கள். தற்போதைய புதிய அரசு எவ்வாறு பட்ஜெட் சார்ந்து திட்டங்களை உருவாக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழக அரசு முதல் பட்ஜெட்டை ஆகஸ்ட் 5ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்ய உள்ளது. மாநிலத்திலும் ஆட்சி கட்டிலில் முதன் முறையாக தவெக அரசு அமர்ந்துள்ளதால் , அவர்கள் தாக்கல் செய்யும் இந்த முதல் பட்ஜெட், மாநிலத்தின் எதிர்காலப் பொருளாதார திட்டங்களை உருவாக்குவதில், முக்கிய பங்கு வைக்கும் என்று தெரிகிறது. மேலும் அரசின் புதிய திட்டங்கள் எளிய மக்களுக்கும் நடுத்தர வர்க்க மக்களுக்கும் பயனுள்ள வகையில் அமைக்க வேண்டும், என்பதில் அரசாங்கம் மிகவும் கவனத்தில் கொண்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக இந்த அரசாங்கத்தின் மீது வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டு , புதிய அரசில் போதிய நிர்வாக அனுபவத்துடன் கூடிய அமைச்சர்கள் யாரும் இல்லை என்பதே. இவற்றிற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் புதிய பட்ஜெட், மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு இருக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் மற்ற அமைச்சர்களை வலியுறுத்தியுள்ளார். முதல்வரின் நேரடி வழிகாட்டுதலின்படி, நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
புதிய பட்ஜெட்டை திட்டமிடுவது தொடர்பாக முதல்வர் விஜய் , ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சர்களுடனும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார். கடந்த திமுக , அதிமுக ஆட்சிகளின் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்து , மாநிலத்தின் தற்போது பொருளாதார சுழலுக்கு ஏற்றவாறு நிதியினை ஒதுக்கீடு செய்வது குறித்து இந்த ஆலோசனைகளில் விவாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த கால அரசுகளின் ஆட்சிக்காலத்தில், ஏற்பட்ட மாநிலத்தின் மொத்த கடன் சுமை 10 லட்சம் கோடியை தாண்டி நிற்கிறது. இந்த கடன் சுமை புதிய அரசாங்கத்திற்கு மிகக் கடுமையான சவாலாக இருக்கும். மாநிலத்தின் நிதி நிலைமையை சீராக பராமரிப்பதுடன், முந்தைய ஆட்சிகளில் வாங்கிய கடன்களுக்கும் வட்டி கட்ட வேண்டிய அவசியம் புதிய அரசாங்கத்திற்கும் உண்டு. இதனால் பட்ஜெட்டில் உருவாக்கப்படும் திட்டங்கள் மேலும் கடன் சுமையை அதிகரிக்கும் வண்ணம் இல்லாமல் கூடுமான அளவு, கடன்களை குறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் அறிவிக்கப்பட்ட இலவச திட்டங்களை நடைமுறைப்படுத்த, அதற்கு உண்டான சாத்தியங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. பொதுவாகவே மக்களின் அத்தியாவசிய தேவைகளை எந்த தடையும் இன்றி நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் அமைக்கப்பட உள்ளது. கல்வி ,மருத்துவம், பொது சுகாதாரம், விவசாயம் , உட்கட்டமைப்பு ஆகியோருக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் புதிய கட்டிடங்கள், சாலைகள், மற்றும் பாலங்கள் ஆகியவற்றை அமைக்கும் போது, ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் அவை முற்றிலும் களையப்பட உள்ளன. பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு முழு சுதந்திரம் முதல்வர் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.