சென்னையில் வரப்போகுது மிதவை உணவகங்கள்!

சென்னையில் வரப்போகுது மிதவை உணவகங்கள்!

சென்னையின் புறநகர்ப் பகுதியான கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் இயங்கி வருகிறது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் படகு இல்லம். இங்கு சுற்றுலாவுக்காக வருகை தரும் பயணிகள் இந்தப் படகு இல்லத்தின் மிதவைப் படகுகள், இயந்திரப் படகுகள் மற்றும் வேகமாக இயங்கும் இயந்திரப் படகுகள் மூலம் சாகசப் பயணங்களை மேற்கொண்டு ஆனந்தம் அடைந்து வருகின்றனர்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினை மேம்படுத்தவும், இந்தப் படகு இல்லத்துக்கு இன்னும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை இங்கு வரவழைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் இந்தப் படகு இல்லத்தில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் 125 அடி நீளம் மற்றும் 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவகக் கப்பல் பயணத்தைத் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்துள்ளார்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த, ‘கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷ்னல்’ நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொதுப் பங்களிப்பு மூலம் இந்த மிதவைக் கப்பல் உணவகத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் மிதவை உணவகக் கப்பல் (Floating Restaurant) இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மிதவை உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. முதல் தளம் திறந்தவெளியாகவும், சுற்றுலா பயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு களித்துப் பயணிக்கும் வகையில் இந்த மிதவை உணவகக் கப்பல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் கப்பலில் சமையலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறையும் (மோட்டார் இன்ஜின்) ஆகிவையும் அமைக்கப்பட உள்ளன. இந்த மிதவைக் கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com