முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் வயது மூப்பினால் காலமானார்!

MGR and Veerappan
MGR and Veerappan

அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரும் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குறியவருமான ஆர்.எம்.வீரப்பனின் உடல்நிலை மோசமானதால் ஞாயிற்றுக்கிழமை அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து இன்று சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

எம்.ஜி.ஆரின் பக்க பலமாக நின்ற வீரப்பன், எம்.ஜி.ஆர் என்ற கழகத்தையும் நிறுவினார். அரசியலில் மட்டுமல்லாமல் வீரப்பன் சினிமாவிலும் சிறந்து விளங்கினார். சினிமாவில் தயாரிப்பாளராகவும், வசனகர்த்தாவாகவும் சிறந்து விளங்கிய இவர், எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் ‘சத்யா மூவிஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவினார்.

மேலும் இவர் ‘தெய்வத் தாய்’, ‘நான் ஆணையிட்டால்’, ‘காவல்காரன்’ என எம்.ஜி.ஆரின் பல படங்களைத் தயாரித்தார். அதன்பிறகு ரஜினியின் ‘பணக்காரன்’, ‘ராணுவ வீரன்’, ‘மூன்று முகம்’, ‘ஊர்க்காவலன்’ போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். அதேபோல் கமலின் ‘காதல் பரிசு’, ‘மூன்றாம் பிறை’ ஆகிய படங்களையும் தயாரித்து சினிமாத் துறையில் முக்கிய நபராக வலம் வந்தார்.

1977 - 1986 வரை மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராக இருந்த இவர், 1986 தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றினார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் பதவி வகித்தார். முதலில் ஜெயலலிதாவை எதிர்த்து ஒதுங்கி இருந்த இவர், அதன்பின்னர்தான் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் பணியாற்றினார்.

சிறிதுகாலத்தில் அதிமுகவில் இருந்து விலகிய இவர் புது கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சிக்கு எம்.ஜி.ஆர் கழகம் என்று பெயரிட்டார். பின்னர் வயது மூப்பு காரணமாக முழுவதுமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இதையும் படியுங்கள்:
சுனிதா கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சர் ஆவாரா? யார் இந்த சுனிதா?
MGR and Veerappan

இந்தநிலையில் இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மோசமான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் இரண்டு நாட்களாக அவரது உடல் மோசமான நிலையிலேயே இருந்து வந்தது. இதனையடுத்து வீரப்பன் இன்று காலை உயிரிழந்ததாக மதியம் அறிவிக்கப்பட்டது. இவருடைய இறப்புக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் நிர்வாகிகளும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் இவருடைய மகன் வெளிநாட்டில் இருப்பதால் நாளை இறுதி ஊர்வலம் நடக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com