யாரும் எங்களை மிரட்டவில்லை, சொந்த விருப்பத்தில் தான் ராஜினாமா செய்தோம் - முன்னாள் MLAக்கள் விளக்கம்!

தவெக-வில் இணைந்த சத்யபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் "யாரும் எங்களை மிரட்டவில்லை" என திட்டவட்டம்.
சபாநாயகர் முன் நேரில் ஆஜராகி முன்னாள் MLAக்கள் விளக்கம்!
சபாநாயகர் முன் நேரில் ஆஜராகி முன்னாள் MLAக்கள் விளக்கம்!
Updated on

கட்சித் தாவல் புகார் காரணமாக பேரவைத் தலைவரிடம் முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா ஆகிய மூவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

அதிமுகவிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா மற்றும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயக்குமார், மதுராந்தகம் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகிய மூவரும் நேரடியாக சபாநாயகரை சந்தித்து கடந்த மாதம் தங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் அதிமுகவினுடைய கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயகர் மற்றும் ஆளுநரிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தது தொடர்பாக குதிரை பேரம் நடந்திருப்பதாகவும், இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் புகார் அளித்திருந்தார். இந் நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதனைத் தொடர்ந்து 20 நாட்களுக்கு முன்னதாக மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ததற்கான விளக்கக் கடிதத்தினை நேரடியாக சபாநாயகரிடம் வழங்கினார்கள்.

ஆனால் அந்த விளக்கக் கடிதத்தை ஆளுநரிடமும் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்திருந்தார். ஏற்கனவே இது தொடர்பான விளக்கத்தை அவர்கள் மூவரும் எழுத்துப்பூர்வமாக அளித்திருந்த போதிலும் இன்று மீண்டும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

ஜேசிடி பிரபாகர்
ஜேசிடி பிரபாகர்

தாங்கள் விருப்பப்பட்டு தான் இந்தப் பதவியை ராஜினாமா செய்ததாகவும், தொடர்ந்து அந்தக் கட்சியில் பயணிக்க விருப்பமின்றி, எந்தவித அழுத்தமும் இன்றி தானாகவே முன்வந்து தான் இந்தப் பதவியை ராஜினாமா செய்ததாகவும் இருவரும் சபாநாயகர் முன்பு விளக்கமளித்துள்ளனர். ஏற்கனவே ராஜினாமா கடிதம் அளித்திருந்த நிலையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தான் இந்த முடிவை எடுத்தார்களா என்பதை உறுதி செய்வதற்காகவே சபாநாயகர் அவர்களிடம் விசாரணை நடத்தினார் என்று கூறப்படுகிறது. முன்னதாக கடந்த மாதம் 17ஆம் தேதியும் இதே போல் சபாநாயகரை நேரில் சந்தித்து அவர்கள் தங்களது ராஜினாமா குறித்து விளக்கம் அளித்திருந்தனர்.

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த பின்னரே பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யபாமா, மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகிய மூவரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம். ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களோடு சமீபத்தில் ராஜினாமா செய்த புதுக்கோட்டை முன்னாள் அமைச்சராக இருந்த சி. விஜயபாஸ்கரும் அவரது ராஜினாமா தொடர்பான விளக்கத்தை நேரடியாக சபாநாயகரிடம் தெரிவிக்க உள்ளார். இதன் பிறகு அந்த விளக்க கடிதம் மற்றும் அதனுடைய நகலினை அதிமுக தரப்பிற்கு வழங்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்:
தனுஷின் அடுத்த அதிரடி சஸ்பென்ஸ்: வெங்கட் பிரபுவுடன் இணைகிறாரா?
சபாநாயகர் முன் நேரில் ஆஜராகி முன்னாள் MLAக்கள் விளக்கம்!
logo
Kalki Online
kalkionline.com